இலங்கை கடற்படையினரின் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண ஒன்றிய அரசை அரசு தொடர்ந்து வலியுறுத்தும் என ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2023ல் இலங்கை கடற்படையினர் 243 மீனவர்களை கைது செய்தனர். தமிழ்நாடு அரசின் விடாமுயற்சியினால், இதுவரை 242 மீனவர்களும், 1 மீன்பிடி படகும் விடுவிக்கப்பட்டு தாயகம் திரும்பினர்.
இருப்பினும் கடந்த ஒரு மாதத்தில் மட்டும், 88 மீனவர்கள் அவர்களது மீன்பிடிப் படகுகளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். தூதரக அளவிலான வழிமுறைகளைப் பின்பற்றி மீதமுள்ள மீனவர்களையும், மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிக்கவும், இந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணவும் ஒன்றிய அரசை தமிழ்நாடு அரசு தொடர்ந்து வலியுறுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.