வாலாஜாபாத்: வாலாஜாபாத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம் சார்பில், 100 சதவீதம் வாக்களிப்போம் என அங்கன்வாடி பணியாளர்கள் தேர்தல் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். தமிழ்நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் வரும் 19ம்தேதி நடைபெறவுள்ளது. இத்தேர்தலை முன்னிட்டு, காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து மாவட்ட தேர்தல் பிரிவு சார்பில், ஒலிபெருக்கி விழிப்புணர்வு, துண்டு பிரசுரங்கள் வழங்குதல், போஸ்டர்கள் ஒட்டுவது, கலை நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்துதல், உறுதிமொழி ஏற்பது உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் பொதுமக்களுக்கு, தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
இதன், ஒரு பகுதியாக வாலாஜாபாத் பேருந்து நிலையத்தில், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம் சார்பில் 100 சதவிகிதம் வாக்களிப்போம் என தேர்தல் உறுதிமொழி எடுத்தல், பேனர்கள், போஸ்டர்கள் மற்றும் துண்டு பிரசுரங்கள் வழங்கி பிரசாரம் மேற்கொண்டனர். இந்நிகழ்வின்போது, குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் இந்திரா, குழந்தைகள் வளர்ச்சி திட்ட மேற்பார்வையாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், அங்கன்வாடி உதவியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.