பெரம்பூர்: சென்னை மாநகர கமிஷனர் உத்தரவின்பேரில், ஒவ்வொரு காவல் மாவட்டத்திலும் துணை கண்காணிப்பாளர் தலைமையில் பொதுமக்கள் குறைதீர் முகாம் மாதம்தோறும் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் நேற்று காலை கொளத்தூர் காவல் மாவட்டத்திற்கு உட்பட்ட பெரவள்ளூர் காவல் நிலையத்தில் பொதுமக்கள் குறைதீர் முகாம் நடத்தப்பட்டது. இதில் கொளத்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் பாண்டியராஜன் தலைமை தாங்கினார். இதில் உதவி கமிஷனர்கள் சிவக்குமார், சகாதேவன், இன்ஸ்பெக்டர்கள் செந்தில்குமார், மூர்த்தி உள்ளிட்ட ஏராளமான அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்த முகாமில் கொளத்தூர் காவல் மாவட்டத்தில் உள்ள 9 காவல் நிலையங்கள் மற்றும் மகளிர் காவல் நிலையங்களில் உள்ள ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், போலீசார் என ஏராளமானோர் கலந்துகொண்டு பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து உடனடி தீர்வு கண்டனர். இந்த முகாமில் நேற்று 38 மனுக்கள் பெறப்பட்டு அதில் 25க்கும் மேற்பட்ட மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது. இந்த முகாமில் வில்லிவாக்கம் பகுதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியை தனலட்சுமி என்ற தனம் (80) என்பவர் ஆட்டோவில் தவறவிட்ட செல்போன் மற்றும் வங்கி ஆவணங்களை சாந்தகுமார் என்ற ஆட்டோ ஓட்டுனர் கண்டுபிடித்து உரியவரிடம் ஒப்படைத்தார். ஆட்டோ டிரைவரின் நேர்மையை பாராட்டி போலீசார் அவருக்கு வெகுமதி அளித்தனர்.