திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள காமநாயக்கன்பாளையம் கே.கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்தவர் நேசபிரபு (29). தனியார் தொலைக்காட்சி செய்தியாளரான இவரை கடந்த 24ம் தேதி இரவு ஒரு கும்பல் வெட்டி கொலை செய்ய முயன்றது. இதுதொடர்பாக ஈரோடு மாவட்டம் சூரம்பட்டியை சேர்ந்த பிரவீன் (27), திருப்பூர் கே.வி.ஆர்.நகரை சேர்ந்த சரவணன் (23) ஆகிய 2 பேரை கைது செய்யப்பட்டனர்.
அவர்களை தனிப்படை போலீசார் காமநாயக்கன்பாளையம் பகுதியில் கொலை முயற்சிக்கு பயன்படுத்தப்பட்ட அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களை வீசிய இடத்தை காண்பிக்க அழைத்துச் சென்றனர். அப்போது இருவரும் போலீசாரிடம் இருந்து தப்பி ஓடி அங்கிருந்த குழியை தாண்டி குதித்துபோது கீழே விழுந்து இருவருக்கும் கால் முறிந்தது. இருவரையும் பிடித்த போலீசார் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்து உள்ளனர்.