திருவனந்தபுரம்: கேரளாவில் போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்களை கண்டுபிடிப்பதற்காக கடந்த சில தினங்களுக்கு முன் சாலைகளில் செயற்கை நுண்ணறிவு கேமராக்கள் வைக்கப்பட்டன. சாலைகளில் அதி வேகமாக செல்பவர்கள், சீட் பெல்ட், ஹெல்மெட் அணியாமல் செல்பவர்கள் உள்பட போக்குவரத்து விதிகளை மீறுபவர்களை உடனுக்குடன் போட்டோ எடுத்து வாகன உரிமையாளரின் செல்போனுக்கு அவை அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த செயற்கை நுண்ணறிவு கேமரா காரணமாக கேரளாவில் ஒரு குடும்பத்தில் பெரும் பிரச்னை ஏற்பட்டு, அந்த விவகாரம் நீதிமன்றம் வரை சென்று விட்டது.திருவனந்தபுரம் கரமனையைச் சேர்ந்த ஒரு வாலிபர் கடந்த சில தினங்களுக்கு முன் அவரது மனைவியின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ள ஸ்கூட்டரை எடுத்து வெளியே சென்றிருந்தார். சில மணிநேரம் கழித்து அவர் வீடு திரும்பினார்.
இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன் இவரது மனைவியின் செல்போனுக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் இருந்து வாட்ஸ் ஆப்பில் ஒரு தகவல் வந்தது. அதில், குறிப்பிட்ட தேதியில் ஸ்கூட்டரில் 2 பேர் ஹெல்மெட் அணியாமல் சென்றதற்கு ரூ.1000 அபராதம் கட்ட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதோடு இணைக்கப்பட்டிருந்த போட்டோவை பார்த்த வாலிபரின் மனைவி கடும் அதிர்ச்சியடைந்தார். பின் சீட்டில் ஒரு இளம்பெண் அமர்ந்திருந்தது தான் அவரது அதிர்ச்சிக்கு காரணமாகும். உடனே கணவனிடம், யார் அந்தப் பெண் என்று அவர் கேட்டார். அப்போதுதான் அந்த வாலிபர் விபரீதத்தை உணர்ந்தார். ரோட்டில் சென்று கொண்டிருந்தபோது ஒரு இளம்பெண் வழியில் லிப்ட் கேட்டதாகவும், அவரை ஏற்றிச் சென்றேன் என்றும் வாலிபர் தன்னுடைய மனைவியிடம் மழுப்ப முயன்றார். ஆனால் அதை அவர் நம்பவில்லை. இறுதியில் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த தகராறு கைகலப்பில் முடிந்தது.இதையடுத்து போலீஸ் நிலையத்திற்கு சென்ற அந்த இளம்பெண், தன்னையும், தனது 3 வயது மகளையும் கணவர் தாக்கியதாக புகார் கொடுத்தார். இதை தொடர்ந்து போலீசார் அந்த வாலிபரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிமன்றம் அந்த வாலிபருக்கு ஜாமீன் வழங்கியது.