வருசநாடு: கடலை-மயிலை ஒன்றியத்தில் சித்த மருத்துவ சிகிச்சை பெறுவதில் பொதுமக்களுக்கு ஆர்வம் அதிகரித்து வருகிறது. இதனால் இந்தப் பகுதியில் உள்ள அரசு சித்த மருத்துவ நிலையங்களில் கூடுதலாக மருந்துகளை இருப்பில் வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்டத்தில் கண்டமனூர், கடமலைக்குண்டு, வருசநாடு உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் அரசு சித்த மருத்துவ நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் சித்த மருத்துவ பிரிவுகள் இயங்கி வருகின்றன. இங்கு நாள்தோறும் ஏராளமான நோயாளிகள் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர்.
இந்த நிலையில், கடமலை மயிலை ஒன்றியத்தில் உள்ள அரசு சித்த மருத்துவ நிலையங்களில் சளி, இருமல், காய்ச்சலுக்கு தரப்படும் சித்த மருந்துகள் நல்ல குணமளிக்கக் கூடியவையாக இருப்பதால் அவற்றைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் கூடுதலாக மருந்துகளை இருப்பில் வைக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து அந்தப் பகுதி மக்கள் கூறுகையில், “எங்கள் பகுதியில் தற்போது சித்த மருத்துவத்திற்கு மக்களிடம் வரவேற்பு அதிகரித்துள்ளது. இயற்கையான மூலிகைகளை கொண்டு தயாரிக்கப்படும் மருந்துகளே சித்த மருத்துவ முறையில் வழங்கப்படுவதால் அவை நன்கு குணமளிக்கக் கூடியவையாக உள்ளன. இதனால் இருமல், சளி, காய்ச்சல் போன்றவற்றுக் சித்த மருந்துகள் மற்றும் லேகியங்களை மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் சித்த மருத்துவ மையங்களில் கூடுதலாக மருந்துகளை இருப்பில் வைத்து பொதுமக்களுக்கு உடனடியாக கிடைக்கச் செய்ய வேண்டும்’’ என்றனர்.