Friday, June 7, 2024
Home » பாயச அன்னம்

பாயச அன்னம்

by Lavanya

திடமாகவும் திரவமாகவும் இல்லாமல் திடதிரவமாக இருக்கும் உணவு பாயசம் ஆகும். இது இனிப்பு வகையானது. பாலை சுண்டக்காச்சி, அத்துடன் வெல்லம் (அல்லது) சர்க்கரைச் சேர்த்து பாயசம் தயாரிக்கின்றனர். இதில் முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாதாம், அக்ரூட் போன்ற உலர் விதைகளை நெய்யில் வறுத்துச் சேர்க்கின்றனர். இது அடிப்படையாகும். பால் பாயசத்திற்குப் பால்போனகம் என்பதும் பெயராகும். அவலைக் கொண்டு செய்வது அவல் பாயசம் எனப்படும். கடலை பருப்பை வேகவைத்து வெல்லத்துடன் கலந்து செய்யும் பாயசம் கடலைப் பருப்பு பாயசம் எனப்படும். பாசிப்பருப்பு சர்க்கரை கலந்து செய்வது பாசிப்பருப்பு பாயசம் ஆகும். மாம்பழ பாயசம், பேரீச்சம் பழம், பலாப்பழம் போன்றவற்றைச் சேர்த்தும் அதிசுவையான பாயசங்கள் தயாரிக்கப்படுகின்றன.

இப்போது ஜவ்வரிசி பாயசம், சேமியா பாயசம், போன்றவைகளும் நிவேதனத்தில் சேர்ந்துக் கொண்டுள்ளன. கேரளத்தில் பலவிதமான பாயசங்கள் செய்யும் வழக்கம் மிகுதியாக உள்ளது. கேரளக் கோயில்களில் பலவகை பாயசங்கள் நிவேதிக்கப் படுகின்றன. இதில் அரவணைப் பாயசம் என்பது தனிச் சிறப்புடையதாக இருக்கின்றது. அம்பிகை வழிபாட்டில் பாயசங்கள் மிகவும் சிறந்த நிவேதனப் பொருளாக உள்ளன. திருமூலர் திருமந்திரத்தில் புவனேஸ்வரி சக்கரத்திற்கு,

‘‘பாற்போனகம்’’ மந்திரந் தால் பயின்றேத்தி
நாற்பால நாரதாய சுவாகா என்று
சீர்ப்பாகச் சேடத்தை மாற்றிப்பின் சீவியே’’.

– என்று பால்பாயச நிவேதனம் செய்வதையும், அதன் பிரசாதத்தைப் பருகினால் நீண்ட ஆயுள் பெறலாம் என்றும் கூறுகிறார். வெள்ளிக்கிழமை தோறும் ஊஞ்சல் சேவையில் அம்பிகைக்கு வடை, பாயசம் நிவேதனம் செய்வது வழக்கமாகும். தசரதருக்கு புத்திரர்கள் வேண்டி கலைக்கோட்டு முனிவர், புத்திரகாமேஷ்டி யாகம் செய்தபோது, அந்த வேள்வித் தீயில் இருந்து ஒருபூதம், வெள்ளி மூடியிட்ட பொற் பாத்திரத்தில் பாயசம் கொண்டு வந்து கொடுத்ததாகவும், அதை தசரதன் தன் மனைவியர் மூவருக்கும் கொடுத்ததாகவும், அதன் பயனாக ராம, லட்சுமண, பரத, சத்ருக்கனர்கள் அவதரித்ததாக வால்மீகி ராமாயணம் கூறுகிறது. உபமன்பு முனிவர் கண்ணனுக்கு தீட்சை அளித்தபின், சிவபெருமானுக்கு பாயசத்தை நிவேதித்து, தானும் அருந்தியபின் எஞ்சியதை கண்ணனிடம் கொடுத்து உடலில் பூசிக் கொள்ளும்படிச் செய்தார். கண்ணன் அதை உடலெங்கும் பூசிக்கொண்டார்.

சிவப்பிரசாதம் என்பதால், உள்ளங்கால்களில் பூசிக்கொள்ளவில்லை. பாரதத்தில் பலரும் எய்த ஆயுதங்கள் எதுவும் அவர் மேனியைத் தாக்காததற்குக் காரணம் அந்த கவசமேயாகும். எனினும் உள்ளங்காலில் பூசிக் கொள்ளாததால் வேடன் எய்த அம்பு உள்ளங்காலில் உடலில் ஊடுறுவி உயிரை மாய்த்தது என்கின்றனர்.

படிப் பாயசம்

பாயசத்தை நிவேதித்தபின், தொன்னையிலோ, பாத்திரத்திலோ தராமல் படித்துறையில் கொட்டுவதும், அதை பக்தர்கள் பிரசாதமாக ஏற்பதையும் ஆய்க்குடி முருகன் ஆலயத்தில் காண்கிறோம். அன்பர்கள் அதை வழித்தெடுத்து அருந்துகின்றனர். நெல்லை மாவட்டத்தில் உள்ள ஆய்க்குடி என்னும் தலத்திலுள்ள முருகப் பெருமானுக்கு, படிபாயச நிவேதனம் செய்யப்படுகிறது. 11 படி பச்சரிசி, 108 தேங்காய், 60 லிட்டர் பசும்பால், 35 கிலோ சர்க்கரை, நெய், ஏலக்காய் சேர்த்து தயாரிக்கப்படுகிறது. கந்த சஷ்டியன்று இது சிறப்பாக நடைபெறுகிறது.

இங்கு, கோயிலை ஒட்டி ஓடும் அனுமன் நதியின் படியை, தண்ணீரால் கழுவிவிட்டு, பக்தர்கள் நிற்கின்றனர். கோயில் பணியாளர் வாளியில் பாயசத்தை கொண்டு வந்து படியில் விடுகிறார். அன்பர்கள் அதை வழித்து எடுத்து உண்கின்றனர். இது அற்புத சக்திகளைத் தரும், கல்வியில் மேன்மை அடையச் செய்யும், நல்ல பிள்ளைப்பேறு தரும் என்று நம்புகின்றனர். பிரார்த்தனை செய்து கொண்டு, படிப் பாயசம் நிவேதிப்பதும் உள்ளது. அனுமன் நதி படிகளில் பாயசத்தை ஊத்தி சிறுவர்கள் அருந்தச் செய்கின்றனர். இவர்களுக்கு நடுவே முருகன் வந்து பாயசத்தை ஏற்று அருள்வார் என்று உறுதியாக நம்புகின்றனர்.

நாகலட்சுமி

 

You may also like

Leave a Comment

sixteen − 4 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi