Saturday, July 12, 2025
Home செய்திகள்Banner News பதஞ்சலி நிறுவனர் பாபா ராம்தேவின் 2வது மன்னிப்பு பிரமாணப் பத்திரத்தை மீண்டும் நிராகரித்தது உச்சநீதிமன்றம்

பதஞ்சலி நிறுவனர் பாபா ராம்தேவின் 2வது மன்னிப்பு பிரமாணப் பத்திரத்தை மீண்டும் நிராகரித்தது உச்சநீதிமன்றம்

by Suresh

டெல்லி: பதஞ்சலி நிறுவனர் பாபா ராம்தேவின் நிபந்தனையற்ற மன்னிப்பை ஏற்க மீண்டும் உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.மருத்துவம் குறித்து போலி விளம்பரம் வெளியிட்டது தொடர்பான வழக்கில் பாபா ராம்தேவ் மன்னிப்பை ஏற்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. அலட்சியமான உங்கள் மன்னிப்பை நாங்கள் நம்பவில்லை; அதனால் நிராகரிக்கிறோம் என உச்சநீதிமன்ற நீதிபதிகள் காட்டமாக தெரிவித்துள்ளனர்.

பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் டூத்பேஸ்ட், சோப்புகள், தேன், ஷாம்பு போன்றவற்றை விற்பனை செய்து வருகிறது. இந்த பொருட்களுக்கான விளம்பரங்கள் சர்ச்சையை ஏற்படுத்தின. பதஞ்சலி நிறுவனம் தீராத நோய்களையும் குணப்படுத்துவதாகவும், அதேபோல அலோபதி மருத்துவ முறைக்கு எதிரான கருத்துக்களை உள்ளடக்கியும் விளம்பரங்கள் வெளியாகின.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய மருத்துவ சங்கம் உச்சநீதிமன்றத்தை நாடியது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், பதஞ்சலி நிறுவனத்தை கடுமையாக எச்சரித்து கண்டனம் தெரிவித்திருந்தது. எந்தவொரு தவறான விளம்பரங்களையும் செய்ய வேண்டாம் என்று அறிவுறுத்திய உச்சநீதிமன்றம், மீறினால் கடுமையான அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரித்தது.

இருப்பினும் கடந்த 4 மாதங்களாக பதஞ்சலி இதுபோன்ற விளம்பரங்களை நிறுத்தவில்லை. இதைத் தொடர்ந்து வழக்கு கடந்த மாதம் விசாரணைக்கு வந்த போது, பதஞ்சலியின் தயாரிப்புகளை விளம்பரப்படுத்துவதற்கு தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் பதஞ்சலி நிறுவனம் மற்றும் அதன் நிர்வாக இயக்குநரான பாலகிருஷ்ணன் ஆகியோருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸை உச்சநீதிமன்றம் வழங்கியது. இந்த நோட்டீஸ் குறித்து பதிலளிக்காத பதஞ்சலி நிறுவனத்திற்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது.

இதையடுத்து நோட்டீஸிற்கு பதில் அளித்த பதஞ்சலி நிர்வாக இயக்குநர் ஆச்சார்ய பாலகிருஷ்ணா நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டார். மேலும் மருத்துவம் தொடர்பாக தவறான தகவல்களை விளம்பரம் செய்த விவகாரத்தில் பதஞ்சலி நிறுவனம் மன்னிப்பு கேட்டது. விளம்பரங்களில் மீண்டும் தவறான தகவல்களை வெளியிட மாட்டோம் என உச்சநீதிமன்றத்தில் பதஞ்சலி நிறுவனம் உறுதி அளித்தது. இதனிடையே கடந்த 2ம் தேதி பதஞ்சலி இணை நிறுவனர் பாபா ராம்தேவ் மற்றும் நிர்வாக இயக்குநர் ஆச்சார்யா பாலகிருஷ்ணா ஆகியோர் நேரில் ஆஜராக உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில் பதஞ்சலியின் மருந்துப் பொருட்களின் தவறான விளம்பரத்திற்காக உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மீறியதற்காக பாபா ராம்தேவ் உச்சநீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார். ஆனால் அவரின் மன்னிப்பை ஏற்க முடியாது என உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. இவ்வழக்கில் ஆஜரான பாபா ராம்தேவ், நிறுவனத்தின் மீடியா பிரிவுதான் செய்தியாளர்கள் சந்திப்பு நடத்தியுள்ளனர்; அதற்கு மன்னிப்பு கோரியுள்ளோம் எனத் தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து, மீடியா பிரிவு நிறுவனத்தின் கீழ் இல்லாமல் தனியாக இயங்குகிறதா என்ன?. எந்த அடிப்படையில் உங்கள் மருந்து பிற மருந்துகளுக்கு மாற்று என கூறுகிறீர்கள்? அறிவியல் ரீதியிலான நிரூபணம் உள்ளதா?. வழக்கு விசாரணையில் உள்ளபோது எவ்வாறு பத்திரிகையாளர் சந்திப்பு நடத்த முடியும்?.

நீதிமன்றத்தின் அனைத்து உத்தரவுகளையும் மீறிவிட்டு தற்போது மன்னிப்பு கேட்பதை எப்படி ஏற்க முடியும்? மன்னிப்பு என்கிற பெயரில் எதையாவது எழுதிக் கொடுத்து விட்டு தப்பித்துவிடலாம் என்று நினைக்காதீர்கள். நீதிமன்றத்தின் அனைத்து உத்தரவுகளையும் மீறிவிட்டு தற்போது மன்னிப்புக் கேட்டால் எப்படி ஏற்க முடியும்? மன்னிப்பை ஏன் எழுத்துப்பூர்வமாகத் தாக்கல் செய்யவில்லை? என நீதிபதிகள் சரமாரியாக கேள்விகளை எழுப்பினர்.

இந்நிலையில் இன்று மருத்துவம் குறித்து போலி விளம்பரம் வெளியிட்டது தொடர்பான வழக்கில் பதஞ்சலி நிறுவனர் பாபா ராம்தேவின் நிபந்தனையற்ற மன்னிப்பை ஏற்க மீண்டும் உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. “மன்னிப்பு கேட்கும் போது மிக அலட்சியமாக நடந்து கொள்கிறீர்கள்; அதே அலட்சியத்தை நாங்கள் ஏன் உங்களுக்கு காட்டக்கூடாது?,

பதஞ்சலி நிறுவனத்தின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்காத அரசு அதிகாரிகளுக்கு எதிராக நாங்கள் ஏன் கடுமையான நடவடிக்கைகளை எடுக்கக் கூடாது?, அலட்சியமான உங்கள் மன்னிப்பை நாங்கள் நம்பவில்லை” என பதஞ்சலியின் இரண்டாவது மன்னிப்பு பிரமாணப் பத்திரத்தை உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது.

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi