புதுடெல்லி: நவீன மருந்துகள் தொடர்பாக பாபா ராம்தேவ் மற்றும் பதஞ்சலி நிறுவனம் அறிவியல் பூர்வமான உண்மைகள் அல்லாத தகவல்களை பரப்புவதாக இந்திய மருத்துவ அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. இதையடுத்து வழக்கு உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் ஹீமா கோலி மற்றும் அசானுதீன் அமானுல்லா ஆகியோர் அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது உச்ச நீதிமன்றத்தின் முந்தைய உத்தரவின் அடிப்படையில் பாபா ராம்தேவ் மற்றும் பதஞ்சலி நிறுவனர் பாலகிருஷ்ணா ஆகிய இருவரும் மூன்றாவது முறையாக நேரில் ஆஜராகி இருந்தனர்.
இதையடுத்து நீதிபதிகள் கூறியதில்,‘‘உங்களது மருத்துவத்தை பிரபலப்படுத்த ஏன் மற்ற மருத்துவத்துறைகளை கொச்சைப் படுத்துகிறீர்கள். அது தவறு என்று ஏன் உங்களுக்கு புரியவில்லை என காட்டமாக கேள்வியெழுப்பினர்.
அப்போது குறுக்கிட்ட பாபா ராம்தேவ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘‘உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளை அவமரியாதை செய்யும் எண்ணம் எங்களுக்கு கொஞ்சம் கூட கிடையாது. இந்த விவகாரத்தில் ஊடகங்களில் நாங்கள் நடந்து கொண்டதற்காக பகிரங்க மன்னிப்பு கேட்க தயாராக இருக்கிறோம் என தெரிவித்தார். அப்போது நீதிபதிகளை பார்த்து பாபா ராம்தேவ் கைகூப்பி மன்னிப்பு கேட்டார். இதையடுத்து வழக்கின் விசாரணையை வரும் 23ம் தேதி ஒத்திவைத்த நீதிபதிகள்,அன்றைய தினம் பாபா ராம்தேவ் நேரில் ஆஜராக வேண்டும்’’ என்று உத்தரவிட்டனர்.