சென்னை: முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதிகளாக இருந்த நளினி, முருகன், சாந்தன் உள்பட ஏழு பேரை விடுதலை செய்து கடந்த 2022ம் ஆண்டு நவம்பர் மாதம் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இதையடுத்து, விடுதலை செய்யப்பட்ட இலங்கை நாட்டை சேர்ந்த முருகன், சாந்தன் உள்ளிட்டோர் அகதிகள் முகாமில் அடைக்கப்பட்டுள்ளனர். திருச்சி அகதிகள் முகாமில் அடைக்கப்பட்டுள்ள சாந்தன், நோய் வாய்ப்பட்டுள்ள தனது தாயை கவனிப்பதற்காக தன்னை இலங்கைக்கு அனுப்பி வைக்க உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், குமரேஷ்பாபு ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில், வெளிநாட்டவர்களுக்கான மண்டல பதிவுத்துறை சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
அதில், முருகன், சாந்தன் உள்ளிட்டோரை இலங்கைக்கு அனுப்ப அவர்களின் பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்களை வழங்குமாறு மத்திய வெளியுறவு அமைச்சகத்திற்கு ஏற்கனவே கடந்த 2022 ஆண்டு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. மீண்டும் கடந்த நவம்பர் மாதம் நினைவூட்டல் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. நான்கு பேரின் விண்ணப்பங்கள் இலங்கை தூதரகத்தில் நிலுவையில் உள்ளன. மேற்கொண்டு நான்கு பேரும் சென்னையில் உள்ள இலங்கை துணை தூதகரத்தை அணுகலாம். இதேபோல ஆதார் அட்டை வழங்கக் கோரி சம்பந்தப்பட்ட அமைப்பை முருகன் அணுகலாம் என்று கூறப்பட்டுள்ளது. இதையடுத்து, இந்த வழக்கின் விசாரணையை நீதிபதிகள் ஜனவரி 10ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.