சென்னை: பல்வேறு இடங்களுக்கு வாகனங்களில் செல்வோர் தங்கும் இடங்களில் ஓட்டுநர்களுக்கு அறை வழங்க வேண்டும் என்று இறையன்பு தெரிவித்துள்ளார். இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வாகனங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப விபத்துக்களும், உயிர்பலிகளும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்நிலையில், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை முதன்மை செயலாளர் அபூர்வ வர்மாவிற்கு தலைமைச் செயலர் இறையன்பு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், பல்வேறு இடங்களுக்கு வாகனங்களில் செல்வோர் தங்கும் இடங்களில் ஓட்டுநர்களுக்கு அறை வழங்க வேண்டும்.
வாகனங்களில் செல்வோர் அறைகளில் தங்கும் நிலையில் வாகன ஓட்டுநர்கள் வராண்டா, வாகனத்தில் தூங்குகின்றனர். சரியான தூக்கமின்றி ஓட்டுநர்கள் வாகனங்களை இயக்கும் நிலையில் விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளது. தங்கும் விடுதிகளில் குறைந்த கட்டணத்தில் வாகன ஓட்டுநர்களுக்கு அறை வழங்க அறிவுறுத்த வேண்டும். ஓட்டுநர்கள் தங்கும் அறைக்கான குறைந்த கட்டணத்தை வாகன பார்க்கிங் கட்டணத்துடன் சேர்க்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.