புதுடெல்லி: பொது சிவில் சட்டம் குறித்து மக்களிடம் கருத்து கேட்பு விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற நிலைக்குழு முன் நாளை தேசிய சட்ட ஆணையம் ஆஜராகி விளக்கம் அளிக்க உள்ளது. ஒன்றிய அரசின் பொது சிவில் சட்ட அறிவிப்புக்கு சீக்கிய அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. திருமணம், விவாகரத்து, சொத்துப் பகிர்வு உள்ளிட்டவை தொடர்பான சட்டங்கள், இந்துக்கள், கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் உள்ளிட்ட மதத்தினருக்கு என்று தனித்தனியாக உள்ளன. இத்தகைய தனித்தனி சட்டங்களால், நிர்வாகத்தில் பெரும் இடையூறு ஏற்படுவதாக குறிப்பிட்டு, அனைத்து சமூகங்களுக்கான பொது சிவில் சட்டத்தை கொண்டுவர ஒன்றிய பாஜக அரசு முயற்சித்து வருகிறது. பொது சிவில் சட்டம் குறித்து அனைத்து தரப்பினரிடமும் புதிதாக கருத்துகளை கோரும் நடவடிக்கையை ஒன்றிய சட்ட ஆணையம் மேற்கொண்டுள்ளது. இதுதொடர்பான பொது அறிவிப்பை, கடந்த 14ம் தேதி சட்ட ஆணையம் வெளியிட்டது.
இதற்கிடையே நாட்டில் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படுவது அவசியம் என்ற கருத்தை பிரதமர் மோடி முன்வைத்தார். அவரது கருத்துக்கு ஆதரவும் எதிா்ப்பும் எழுந்துள்ளது. இந்தச் சூழலில், ஒன்றிய அரசின் சட்டம் மற்றும் பணியாளர் விவகாரங்கள் மீதான நாடாளுமன்ற நிலைக் குழு, பொது சிவில் சட்ட விவகாரம் குறித்து ஒன்றிய அரசின் சட்ட ஆணையம் மற்றும் சட்ட அமைச்சக பிரதிநிதிகளிடம் விளக்கம் பெறவுள்ளது. இதற்காக ஜூலை 3ம் தேதி (நாளை) தங்கள் முன் நேரில் ஆஜராகும்படி அவர்களுக்கு நாடாளுமன்ற நிலைக் குழு அழைப்பு அனுப்பியுள்ளது. அதனால் நாளை ஒன்றிய அரசின் சட்ட ஆணையம் மற்றும் சட்ட அமைச்சக பிரதிநிதிகள், பொது சிவில் சட்டம் தொடர்பான அறிக்கை விபரங்களை நாடாளுமன்ற நிலைக் குழுவிடம் தெரிவிக்க உள்ளனர்.
பொது சிவில் சட்டம் தொடர்பாக, இதுவரை சுமார் ஒன்பது லட்சம் கருத்துகள் பதிவாகியுள்ளன என்று சட்ட ஆணைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இச்சட்டத்திற்கு எதிர்கட்சியான ஆம்ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு அளித்துள்ளன. இந்நிலையில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் வரும் 20ம் தேதி தொடங்க உள்ளதால், வருகிற நாடாளுமன்ற கூட்டத் தொடரில் பொது சிவில் சட்டம் கொண்டு வர வாய்ப்புள்ளதாக ஒன்றிய அரசின் நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன. இதற்கிடையே பொது சிவில் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், சீக்கியர்களின் சிரோமணி குருத்வாரா பிரபந்தக் கமிட்டி, சிரோமணி அகாலி தளம் ஆகியன அறிவிப்புகளை வெளியிட்டுள்ளன.
இதற்கிடையில், டெல்லியைச் சேர்ந்த சீக்கிய ஆர்வலர்களின் குழுவான ‘தி சீக் கலெக்டிவ்’ சார்பில் நேற்று டெல்லி திலக் நகரில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதுகுறித்து சீக்கிய விவகாரங்களுக்கான ஆர்வலர் ஜக்மோகன் சிங் கூறுகையில், ‘சிவில் சட்டங்கள் என்ற பெயரில் சீக்கிய மக்கள் ஏற்கனவே பல பிரச்னைகளை எதிர்கொள்கிறோம். எங்களது மதம் தனித்துவமானது. சீக்கிய தனிநபர் சட்ட வாரியம் அமைக்க பாடுபடுவோம். இந்த பிரச்னையில் ஒன்றிய அரசுடனும், சமூக அமைப்புகளுடனும் ஒருமித்த கருத்தை உருவாக்குவோம். பொது சிவில் சட்டத்தை எதிர்க்கிறோம்’ என்று கூறினார்.