சென்னை: நாடாளுமன்ற தேர்தலையொட்டி ஏப். 17, 18 தேதிகளில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழ்நாடு மற்றும் புதுசேரியில் நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு மற்றும் காலியாக உள்ள விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதிக்கு வரும் 19ம் தேதி ஒரே கட்டமாக நடக்கிறது. தமிழ்நாட்டில் திமுக, அதிமுக, பாஜ கூட்டணி இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. இதனால் அரசியல் கட்சிகள் தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.
இந்நிலையில், தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது. அதன்படி வாக்குப்பதிவு நாளான்று ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் என்று தமிழ்நாடு தொழிலாளர் நலத்துறை உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் பணியாற்றி வருபவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று வாக்களிக்க ஏதுவாக ஏப். 17, 18ம் தேதிகளில் அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில் 2,000க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது: 100 சதவீத வாக்குப்பதிவு என்ற இலக்கை எட்ட வேண்டும் என தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி வருகிறது. பொதுமக்கள் தங்களுக்கு ஓட்டு உள்ள ஊர்களுக்கு சென்று வாக்களிக்க வசதியாக, தமிழகம் முழுதும் சிறப்பு பேருந்துகளை இயக்க உள்ளோம். ஏப். 17, 18ம் தேதிகளில் மாவட்டங்கள்தோறும் பயணிகளின் தேவைக்கு ஏற்ப நாள் முழுவதும் சிறப்பு பேருந்துகள் இயக்க உள்ளோம். சென்னையில் இருந்து முக்கியமான நகரங்கள் மற்றும் மாவட்டங்களுக்கு 2,000க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகளை இயக்க உள்ளோம். அரசு விரைவு பேருந்துகளில், 60 நாட்களுக்கு முன்பே டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி இருப்பதால் பொதுமக்கள் தங்கள் பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டு www.tnstc.in இணையதளம் மற்றும் டிஎன்எஸ்டிசி செயலி வாயிலாக முன்பதிவு செய்து பயணிக்கலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.