வார்சா: ஐரோப்பிய யூனியனின் 5வது முக்கிய நாடும், அதன் 6வது பெரிய பொருளாதார நாடாகவும் உள்ள போலந்தின் நாடாளுமன்ற தேர்தல் நேற்று நடந்தது. நாடு முழுதும் உள்ள 31,000 வாக்குச்சாவடிகளில் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை மக்கள் வாக்குகளை செலுத்தினர். 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை போலந்து செனேட் நாடாளுமன்றத்துக்கு 100 உறுப்பினர், கீழ்சபைக்கு 460 உறுப்பினர்களுக்கான தேர்தல் நடக்கும். கடந்த 2019ல் நடந்த தேர்தலில் லா அண்டு ஜஸ்டிஸ் சுமார் 44 சதவீத வாக்குகளை பெற்று ஆட்சியை கைப்பற்றியது.
அக்கட்சி கத்தோலிக்க பாரம்பரியத்தை காப்பதிலும், பென்ஷனர்கள் நலன், ஏழைகள் நலனில் அக்கறை காட்டி மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்றது. ஆனால் போலந்தின் ஜனநாயக மரபுகளை ஆளுங்கட்சி சிதைத்து விட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. ஆளுங்கட்சி தற்போதைய தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்பில் 30 சதவீத ஆதரவை மட்டுமே பெற்றுள்ளதால் மக்கள் மாற்றத்தை விரும்புவதாக எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளன.