சென்னை: தேர்தல் நடைபெறும் நாளன்று விடுமுறை அளிக்க தவறும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும், என தொழிலாளர் நலத்துறை எச்சரித்துள்ளது. இதுகுறித்து தொழிலாளர் துறை இணை ஆணையர் -1, சுபாஷ் சந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கை: மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951. பிரிவு 135(பி)ன் கீழ், தமிழ்நாடு தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவுரைகளின்படி தமிழ்நாட்டில் உள்ள தொழில் நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், தோட்ட நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், பீடி மற்றும் சுருட்டு நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மற்றும் அனைத்து பொதுத்துறை நிறுவனங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் தொழிலாளர்களான தினக்கூலி/ தற்காலிக/ ஒப்பந்த தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்து பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு தேர்தல் நாளான 19.4.2024 அன்று வாக்களிக்க ஏதுவாக ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்பட வேண்டும், என கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேலும், கட்டுமான தொழில் உள்ளிட்ட அனைத்து அமைப்பு சாரா தொழில்களில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கும் தேர்தல் நாளான 19.4.2024 அன்று விடுப்பு வழங்கப்பட வேண்டும். இந்த விடுப்பு நாளுக்கான ஊதியம் சாதாரணமாக தொழிலாளிக்கு ஒரு நாளுக்கு அளிக்கப்பட்டு வரும் ஊதியமாகவும் பணியின் தன்மைக்கேற்ப அரசால் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள
குறைந்தபட்ச ஊதியத்திற்கு குறையாமலும் இருக்க வேண்டும், என அனைத்து வேலையளிப்பவர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேற்கண்டவாறு தேர்தல் நடைபெறும் நாளான 19.4.2024 அன்று விடுமுறை அளிக்க தவறும் நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதுகுறித்து புகார் அளிக்க தொழிலாளர் துறை சார்பில் சென்னை மாவட்டத்திற்கு வடசென்னை/ தென் சென்னை/ மத்திய சென்னை என தனித்தனியாக கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளன.
விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் தொடர்பாக தொழிலாளர்கள் கீழ்கண்ட எண்ணிற்கு தொடர்பு கொண்டு தங்களது புகார்களை தெரிவிக்கலாம்.