சென்னை: தென்காசி மற்றும் நெல்லை நிர்வாகிகளுடன் திமுக தேர்தல் ஒருங்கிணைப்பு குழு ஆலோசனை நடத்தி வருகிறது. வருகின்ற நாடாளுமன்ற தேர்தலுக்காக திமுக, அதிமுக போன்ற பல்வேறு கட்சிகள் செயலில் இறங்கி இருக்கின்றன. கடந்த 24ம் தேதி முதல் நாடாளுமன்ற தொகுதி வாரியாக திமுக நிர்வாகிகளுடன் திமுக தேர்தல் ஒருங்கிணைப்பு குழு ஆலோசனை கூட்டம் நடத்தி வருகிறது. அந்த வகையில் 4வது நாளாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. இன்று காலை சிவகங்கை, விருதுநகர் மாவட்ட நிர்வாகிகளுடன் திமுக தேர்தல் ஒருங்கிணைப்பு குழு ஆலோசனை நடத்தியது.
இந்நிலையில், மாலை நேரத்தை பொறுத்தவரை தென்காசி மற்றும் திருநெல்வேலி தொகுதி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. தென்காசி, திருநெல்வேலி ஆகிய இரண்டு தொகுதியுமே தற்போது திமுக நிர்வாகிகளிடையே ஒரு சில சலசலப்பு இருப்பதால் தொகுதி தொடர்பான கள சூழல், கள நிலவரங்களை திமுக தேர்தல் ஒருங்கிணைப்பு குழு ஒரு விரிவான ஆலோசனையை நடத்தி வருகிறது என்றே தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக ஒவ்வொரு நாடாளுமன்ற தொகுதி ஆலோசனையின் போதும் வெற்றி வாய்ப்பு எவ்வாறு உள்ளது? யாருக்கு வாய்ப்பு அளித்தால் வெற்றி பெறுவது சுலபமாக இருக்கும்? என்று திமுக தேர்தல் ஒருங்கிணைப்பு குழு ஆலோசித்து வருகிறது.
தென்காசி, திருநெல்வேலி தொகுதியை பொறுத்தவரை ஏற்கனவே திமுக இந்த தொகுதியில் கடந்த முறை நேரடியாக போட்டியிட்டது. வரக்கூடிய 2024 நாடாளுமன்ற தேர்தலிலும் தென்காசி, திருநெல்வேலி தொகுதியில் திமுக நேரடியாக போட்டியிட திட்டமிட்டுள்ளது. திருநெல்வேலி தொகுதியில் ஏற்கனவே எம்.பி.யாக உள்ள ஞானதிரவியத்திற்கு மீண்டும் வாய்ப்பு கொடுக்கப்படாது என்று தகவல் வெளியாகியுள்ளது. அமைச்சர்கள் கே.என்.நேரு, தங்கம் தென்னரசு, உதயநிதி ஸ்டாலின், எ.வ.வேலு மற்றும் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் திமுக தேர்தல் ஒருங்கிணைப்பு குழுவில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.