Monday, May 20, 2024
Home » நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன் வேட்பாளர்களை தேர்வு செய்ய தீவிரம்: பட்டியல் தயாரிப்பில் திமுக, அதிமுக, பாஜ மும்முரம்

நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன் வேட்பாளர்களை தேர்வு செய்ய தீவிரம்: பட்டியல் தயாரிப்பில் திமுக, அதிமுக, பாஜ மும்முரம்

by Karthik Yash

சென்னை: நாடாளுமன்ற தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், அதற்கு முன்பே வேட்பாளர்களை தேர்வு செய்து முதல் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை அறிவிக்க தமிழக அரசியல் கட்சிகள் மும்முரம் காட்டி வருகின்றன. இதனால் திமுக, அதிமுக, பாஜ உள்ளிட்டகட்சிகள் வேட்பாளர்கள் தேர்வை தீவிரப்படுத்தியுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் களம் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அரசியல் கட்சியினர் தங்கள் கூட்டணி பேச்சுவார்த்தைகளை இறுதி செய்து வருகின்றனர். குறிப்பாக தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் வேகம் காட்டி வருகின்றன. தொகுதி பங்கீடு, கூட்டணி பேச்சுவார்த்தை என அனல் பறந்து வருகிறது.

தமிழகத்தை பொறுத்தவரை திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி வலுவாக அமைந்துள்ளது. அதே நேரம், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக-பாஜ ஒரே கூட்டணியில் இருந்த நிலையில் தற்போது இரு கட்சிகளும் தனித்தனியாக பிரிந்து தேர்தலை சந்திக்கின்றன. திமுக தலைமையில் ஒரு கூட்டணியும், பாஜ தலைமையில் ஒரு கூட்டணியும், அதிமுக தலைமையில் ஒரு கூட்டணியும் என களம் காண இருக்கின்றன. இந்நிலையில் , அரசியல் கட்சியினர் தங்கள் கூட்டணி பேச்சுவார்த்தைகளை இறுதி செய்து வருகின்றனர்.

அந்த வகையில், திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு தமிழகம், புதுச்சேரி என மொத்தம் 10 தொகுதிகளும், விசிக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா இரண்டு தொகுதிகளும், மதிமுக, கொமதேக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் கமலஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு அடுத்த ஆண்டு நடைபெற உள்ள மாநிலங்களவை தேர்தலில் ஒரு ராஜ்யசபா சீட் ஒதுக்கப்படும் என்று உடன்பாடு ஏற்பட்டது.

எனவே, திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியில் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை நிறைவடைந்தை தொடர்ந்து அடுத்த கட்டமாக தேர்தல் பிரசாரத்துக்கு முழு அளவில் தயாராகி வருகிறது. திமுக சார்பில் அறிவாலயத்தில் விருப்ப மனுக்கள் பெறப்பட்டது. 40 தொகுதிகளுக்கும் 2,984 பேர் விருப்ப மனுக்கள் அளித்திருந்தனர். இவர்கள் அனைவரையும் சென்னை அண்ணா அறிவாலயத்துக்கு நேர்காணலுக்கு வருமாறு அழைப்பு அனுப்பப்பட்டிருந்தது. அவர்களிடம் முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் நேர்காணல் நடத்தினார். தொகுதி நிலவரம், வெற்றி வாய்ப்பு, கட்சியில் எத்தனை ஆண்டுகாலம் பணியாற்றுகிறீர்கள், எவ்வளவு செலவு செய்ய முடியும்? என்பது போன்ற கேள்விகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார்.

நேர்காணல் நிறைவடைந்த நிலையில் வேட்பாளர்கள் தேர்வில் திமுக தலைமை படுவேகமாக செயல்பட்டு வருகிறது. தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பே 21 தொகுதிக்கான வேட்பாளர்களை தேர்வு செய்து பட்டியலை தயாரித்து விட வேண்டும் என்பதில் திமுக தலைமை உறுதியாக உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் விரைவில் திமுக வேட்பாளர்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம், கூட்டணியில் இருந்து பாஜ கழற்றிவிடப்பட்டுள்ள நிலையில் பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளுடன் சேர்ந்து களமிறங்க அதிமுக வியூகம் வகுத்து வருகிறது. வலுவான கூட்டணியை அமைப்போம் என்று கூறி வந்த எடப்பாடி பழனிசாமி அதற்கான முயற்சிகளில் இறங்கியுள்ளார். தேமுதிக உடன் பேச்சுவார்த்தை நடத்தியும் இன்னும் உடன்பாடு எதுவும் எட்டவில்லை.

அதேபோன்று பாமகவுடன் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் பாமகவும் தனது முடிவை இன்னும் தெரிவிக்கவில்லை. முக்கிய கட்சிகள் எதுவும் கூட்டணிக்கு வராததால், சிறிய உதிரி கட்சிகள் கூட அதிமுக கூட்டணிக்கு வரவில்லை என்ற விமர்சனம் எழுந்துள்ளது. இந்நிலையில், புதிய தமிழகம் கட்சி, அகில இந்திய பார்வர்டு பிளாக் தலைவர் கதிரவன் ஆகியோர் கூட்டணியை உறுதி செய்துள்ளனர். இந்த சூழ்நிலையில், அதிமுக சார்பில் போட்டியிட வாய்ப்பு கோரிய 2,475 பேருக்கும் நேர்காணலுக்கு வருமாறு அழைப்பு அனுப்பப்பட்டிருந்தது.

அவர்களிடம் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று தொடங்கி இன்றும் நேர்காணலை நடத்துகிறார். அதன்பின் கூட்டணிக்கு யாராவது வருவார்களா என்பதற்கு ஏற்ப தொகுதிகள் ஒதுக்கப்பட்டு அதிமுகவில் வேட்பாளர்கள் தேர்வு தீவிரப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதே நிலமை தான் தமிழகத்தில் உள்ள பாஜவுக்கும். அதிமுக பக்கம் தேமுதிக சாய்ந்த நிலையில், அவர்களை தங்கள் பக்கம் இழுக்கும் பணியில் பாஜ மும்முரமாக இறங்கியது. ஆனால் அதில் தோல்வியே ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனவே தற்போது, பாஜ கூட்டணியில் தமாகா, புதிய நீதிகட்சி, ஜாண் பாண்டியன் உள்ளிட்டவர்கள் இணைந்துள்ளனர். பிரதமர் மோடி தமிழகம் வருகையின் போது, முக்கிய கட்சி தலைவர்கள் பாஜ கூட்டணியில் இணைவார்கள் என்று தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை பரபரப்பாக கூறினார்.

ஆனால் அதுபோன்ற சம்பவம் எதுவும் நடக்கவில்லை. இதனால் பிரதமர் மோடியும் கடும் அதிருப்தி அடைந்ததாக கூறப்படுகிறது. பாஜ உடன் எந்த கட்சியும் கூட்டணி அமைக்க விரும்பவில்லை என்ற விமர்சனமும் அப்போது எழுந்தது. இந்நிலையில், பாஜ கூட்டணிக்கு தேமுதிகவை இழுக்கும் படலம் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையே, தமிழக பாஜ கட்சியின் தேர்தல் ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் பாஜ தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நேற்று காலை நடைபெற்றது. இதில், தமிழ்நாட்டில் வெற்றி வாய்ப்புள்ள 10 நாடாளுமன்ற தொகுதிகளின் பட்டியல் இறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இப்படியாக தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பே முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிடும் வகையில் வேட்பாளர்கள் தேர்வில் கட்சிகள் கவனம் செலுத்த தொடங்கியுள்ளன. இதனால் தமிழகத்தில் தேர்தல் களம் அனல் பறக்க தொடங்கியுள்ளது. அதிமுக பக்கம் தேமுதிக சாய்ந்த நிலையில், அவர்களை தங்கள் பக்கம் இழுக்கும் பணியில் பாஜ மும்முரமாக இறங்கியது. ஆனால் அதில் தோல்வியே ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

You may also like

Leave a Comment

5 × 3 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi