Saturday, June 1, 2024
Home » நாடாளுமன்ற தேர்தல் களம் சூடுபிடிக்கிறது திமுக வேட்பாளர்கள் அனல் பறக்கும் பிரசாரம்: தமிழக அரசின் சாதனைகளை விளக்கி வாக்கு சேகரிப்பு

நாடாளுமன்ற தேர்தல் களம் சூடுபிடிக்கிறது திமுக வேட்பாளர்கள் அனல் பறக்கும் பிரசாரம்: தமிழக அரசின் சாதனைகளை விளக்கி வாக்கு சேகரிப்பு

by Ranjith

சென்னை: திமுக வேட்பாளர்கள் அனல் பறக்கும் பிரசாரத்தை தொடங்கியுள்ளனர். தமிழக அரசின் சாதனைகளை விளக்கி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகள், புதுச்சேரியில் ஒரு தொகுதி என மொத்தம் 40 நாடாளுமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ளது. திமுக கூட்டணியில் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், மதிமுக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன.

இதில் கூட்டணி கட்சிகளுக்கு தமிழகத்தில் 18 தொகுதிகள், புதுச்சேரியில் ஒரு தொகுதி என 19 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மீதியுள்ள 21 தொகுதிகளில் திமுக போட்டியிடுகிறது. இதில் மத்திய சென்னை தொகுதியில் தயாநிதி மாறன், தென்சென்னையில் தமிழச்சி தங்கபாண்டியன், வடசென்னையில் கலாநிதி வீராசாமி உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர். பெயர் பட்டியல் அறிவிக்கப்பட்டவுடன் முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை சந்தித்து வேட்பாளர்கள் அனைவரும் வாழ்த்து பெற்றனர்.

வாழ்த்து பெற்ற கையோடு வேட்பாளர்கள் அனைவரும் தங்கள் தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளுக்கு சென்று பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வீடு, வீடாக சென்று மக்களிடம் அவர்கள் வாக்குகளை கேட்டு வருகின்றனர். இதேபோல முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று முதல் தனது பிரசாரத்தை தொடங்கியுள்ளார். திருச்சியில் நடந்த பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்று அவர் பேசினார். மேலும் திமுக இளைஞர் அணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று முதல் தீவிர பிரசாரத்தில் ஈடுபட உள்ளார்.

கடந்த முறை உதயநிதி ஸ்டாலின் ஒற்றை செங்கலை வைத்து பிரசாரத்தில் ஈடுபட்டது மக்களை வெகுவாக கவர்ந்தது குறிப்பிடத்தக்கது. இதே போல, மநீம தலைவர் கமல்ஹாசன் திமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தமிழகம் முழுவதும் பிரசாரத்தில் ஈடுபட உள்ளார். இதே போல, திமுக முன்னணியினர், கூட்டணி கட்சிகளின் தலைவர்களும் பிரசாரத்தில் இறங்க உள்ளனர். இதனால், தேர்தல் களம் தமிழகத்தில் விறுவிறுப்படைய தொடங்கியுள்ளது.

* மத்திய சென்னை தொகுதியில் உதயநிதி இன்று பிரசாரம்
திமுக இளைஞர் அணி மாநில செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் சென்னை சேப்பாக்கம் தொகுதியில் இன்று காலை 8.30 மணிக்கு பிரசாரத்தை தொடங்குகிறார். மத்திய சென்னை தொகுதி திமுக வேட்பாளர் தயாநிதி மாறனை ஆதரித்து தனது முதல்கட்ட பிரசாரத்தை உதயநிதி மேற்கொள்கிறார். சேப்பாக்கம் பகுதி 62வது வட்டத்தில் அமைந்து உள்ள ஐயா தெரு, பஜார் தெரு சந்திப்பில் இருந்து பிரசாரத்தை தொடங்குகிறார். அங்கு மக்களிடம் வீடு, வீடாக சென்று வாக்கு கேட்கிறார். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம் பிரசாரத்தை தொடர்ந்து நாளை திருச்சுழியில் சுற்றுப் பயணம் செய்கிறார்.

You may also like

Leave a Comment

two × five =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi