சென்னை: நமதுரிமை காக்கும் கட்சி பொதுச்செயலாளர் செங்கை பத்மநாபன் விடுத்துள்ள அறிக்கை: மத்தியில் கடந்த காலத்திலும் நிகழ்காலத்திலும் காங்கிரஸ், பாஜக பிற கூட்டணி கட்சிகள் யார் ஆட்சி செய்தாலும் சில பிரச்னைகளின் தீர்வுக்காக பாராளுமன்றத்தை தொடர்ந்து முடக்கி பாராளுமன்றத்தின் மாண்பை சீர்குலைக்கும் அரசியல் கட்சிகளின் செயல்பாட்டை வன்மையாக கண்டிக்கிறேன்.
சட்டமன்றத்தை எதிர்கட்சிகள் முடக்க முயற்சி செய்தால் சட்டமன்ற காவலர்களை கொண்டு உறுப்பினர்களை அவையில் இருந்து அகற்ற எவ்வாறு சட்டம் உள்ளதோ அதை போன்று பாராளுமன்றத்திலும் அத்துமீறும் உறுப்பினர்களை அகற்றும் சட்டத்தை கொண்டு வரவேண்டும்.
நம்நாட்டின் உச்ச அதிகாரம் கொண்ட சட்டம் இயற்றும் மன்றத்தை முடக்குவதால் நாட்டின் பல துறைகளில் பல தரப்பட்ட பணிகளில் காலதாமதம், இழப்பு ஏற்படுவதால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். இதை மக்கள் பிரதிநிதிகள் மனதில் கொண்டு அரசியல் செய்ய கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.