திருவள்ளூர்: ஊத்துக்கோட்டை வட்டம், பேரிட்டிவாக்கம் ஊராட்சியில் ஆதிதிராவிடர்கள் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாவட்ட நலக்குழு உறுப்பினர் நீலவானத்து நிலவன் தலைமையில் பொதுமக்கள் மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: ஊத்துக்கோட்டை வட்டம், பேரிட்டி வாக்கம் ஊராட்சியில் ஆதிதிராவிடர் வகுப்பைச் சேர்ந்த 38 குடும்பத்தினர் 40 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகின்றனர். ஆனால் இவர்களுக்கு பட்டா வழங்கவில்லை. திருமணமாகி ஒரே வீட்டில் இரண்டு, மூன்று குடும்பங்கள் எந்தவித வசதியும் இல்லாமல் வாழ்ந்து வருகின்றனர். பட்டா இல்லாத காரணத்தால் தொகுப்பு வீடுகள் கட்ட முடியாமல் அவதியுற்று வருகின்றனர்.
எனவே இந்த 38 ஆதிதிராவிடர் குடும்பங்களுக்கு இலவச வீட்டு மனைப் பட்டா வழங்க வேண்டும். அதேபோல் பேரிட்டிவாக்கம் ஊராட்சிக்குட்பட்ட உப்பரப்பாளையம் கிராமத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய 10 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் குடிசை வீடு கட்டி 40 ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். இவர்களுக்கு பட்டா இல்லாததால் அரசு வழங்கும் நலத்திட்டங்களைப் பெற முடியாமல் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே இந்த 10 குடும்பங்களுக்கும் மாவட்ட நிர்வாகம் சார்பில் உடனடியாக வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும். இவ்வாறு அந்த கோரிக்கை மனுவில் கூறியுள்ளார்.