சென்னை: பெற்றோர், மூத்த குடிமக்கள் பராமரிப்பு நலச்சட்டம் தமிழ்நாட்டில் அமல்படுத்தப்பட்டுள்ளதாக ஐகோர்ட்டில் அரசு பதில் அளித்துள்ளது. பெற்றோர், மூத்த குடிமக்கள் பராமரிப்பு நலச்சட்டத்தை தமிழ்நாட்டில் அமல்படுத்தக் கோரி சி.குமார் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். மூத்த குடிமக்களுக்கான தேசியக் கொள்கையையும் தமிழ்நாட்டில் அமல்படுத்த வேண்டும் என்று மனுதாரர் தெரிவித்திருந்தார். காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் மூத்த குடிமக்களின் விவரங்களை சேகரிக்க டிஜிபி அறிவுறுத்தியுள்ளதாக அரசு தரப்பு தெரிவித்தது. மூத்த குடிமக்கள் புகாருக்கு முன்னுரிமை தந்து, அதனை தீர்த்து வைக்க டிஜிபி சுற்றறிக்கை அனுப்பியுள்ளார் என்றும் அரசு தரப்பு குறிப்பிட்டது.