செங்கல்பட்டு: சென்னை நிகழ்ச்சியை முடித்துவிட்டு தென்மாவட்டங்களுக்கு திரும்பிய ஐஜேகேவினர் சென்ற வாகனங்களில் பாஸ்ட்டேக் மூலம் சுங்க கட்டணம் வசூலிக்கப்பட்டதை கண்டித்தும், அப்பணத்தை திருப்பித்தர வலியுறுத்தியும் பரனூர் சுங்கச்சாவடியில் நேற்று நள்ளிரவு திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். சென்னையில் நேற்று இந்திய ஜனநாயக கட்சித் தலைவர் ரவி பச்சமுத்துவின் பிறந்தநாள் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்ற தென்மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான ஐஜேகேவினர் சொந்த ஊருக்கு திரும்பினர். இவர்களின் வாகனங்கள் செங்கல்பட்டு அருகே பரனூர் சுங்கச்சாவடியை கடந்தபோது, அந்த வாகனங்களில் இருந்த ‘பாஸ்ட்டேக்’ மூலம் சுங்க கட்டணம் வசூலிக்கப்பட்டதாக வேன் டிரைவர்களுக்கு குறுந்தகவல் வந்துள்ளது.
இதை அறிந்ததும் நேற்று நள்ளிரவு பரனூர் சுங்கச்சாவடியில் 100க்கும் மேற்பட்ட ஐஜேகேவினர் ஒன்றுகூடி, தங்களது வாகனத்தில் பாஸ்ட்டேக் மூலம் வசூலித்த சுங்க கட்டணத்தை திருப்பி வழங்கும்படி வலியுறுத்தியும், கட்சி வாகனங்களுக்கு சுங்க கட்டணம் வசூலிக்கப்படுவதை கண்டித்தும் திடீரென சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு சென்ற அனைத்து வாகனங்களையும் வழிமறித்து நிறுத்தினர்.
இதனால் பரனூர் சுங்கச்சாவடி பகுதியில் 6 பூத்துகளிலும் நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்து நின்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.செங்கல்பட்டு தாலுகா மற்றும் போக்குவரத்து போலீசார், சாலைமறியலில் ஈடுபட்ட ஐஜேகேவினரிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். சுங்க கட்டணத்தை திருப்பித் தருவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கிறோம் என போலீசார் உறுதியளித்தனர். இதை ஏற்று சாலை மறியலை கைவிட்டு ஐஜேகேவினர் வாகனங்களில் கிளம்பி சென்றனர்.