மாமல்லபுரம்: மாமல்லபுரம் தலசயன பெருமாள் கோயிலில் பங்குனி உத்திர உற்சவம் நிறைவு பெற்றது. மாமல்லபுரத்தில் உள்ள உலக பிரசித்தி பெற்ற தலசயன பெருமாள் கோயிலில் தலசயன பெருமாள், நிலமங்கை தாயார், ஆண்டாள், பூதத்தாழ்வார், நரசிம்மர், ராமன் – சீதை, லட்சுமணன், ஆஞ்சநேயர், கருடன் ஆகியோருக்கு தனித்தனி சன்னதிகள் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு 10 நாள் உற்சவம் நடைபெறுவது வழக்கம்.
இந்தாண்டு, கடந்த 16ம் தேதி பங்குனி உத்திர உற்சவம் வெகு விமரிசையாக தொடங்கியது. இதனை தொடர்ந்து, தினமும் நிலமங்கை தாயாருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. பின்னர், கோயில் உள்பிரகாரத்தில் நிலமங்கை தாயார் சுற்றி வந்து ஊஞ்சல் சேவை நடைபெற்று, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
இந்நிலையில், பங்குனி உத்திரம் நிறைவு நாளையொட்டி நேற்று காலை பட்டாச்சாரியார்கள் மூலம் யாகம் வளர்த்து பெருமாள், தாயார், பூதத்தாழ்வாருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் திருமஞ்சனம் செய்யப்பட்டது. இதையடுத்து, மாலை 6 மணிக்கு 4 ராஜவீதிகள் வழியாக தலசயன பெருமாள், ஸ்ரீதேவி, பூ தேவியுடன் திருவீதியுலா வந்து, தலசயன பெருமாள் – நிலமங்கை தாயாருக்கு மாலை மாற்றி திருக்கல்யாண வைபவம் வெகு விமரிசையாக நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.