பள்ளிப்பட்டு: பள்ளிப்பட்டில் லட்சுமி கணபதி ஆலய கும்பாபிஷேக விழா நேற்று நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு ஆஞ்சநேய நகரில் ஸ்ரீ லட்சுமி கணபதி ஆலய மஹா கும்பாபிஷேக விழா நேற்று வெகு விமர்சையாக நடைபெற்றது. விழாவை முன்னிட்டு கோயில் வளாகத்தில் யாகசாலைகள் அமைக்கப்பட்டு ஹோம பூஜைகள் நடைபெற்றது. இதனை தொடர்ந்து மேளதளங்கள் முழங்க புனிதநீர் கலசங்கள் புறப்பாடு நடைபெற்று கோபுர கலசத்திற்கு புனித நீரால் மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதில் பேரூர் திமுக செயலாளர், பேரூராட்சி துணைத் தலைவர் ஜோதி குமார், திருவள்ளூர் மேற்கு மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளர் குப்பன் (எ) பத்மநாபன் உட்பட பலர் கலந்து கொண்டனர். கும்பாபிஷேக விழாவில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நகர தலைவர் ஸ்டாலின் தலைமையில், ஆயிரம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் விஜய் மக்கள் இயக்க திருத்தணி தொகுதி தலைவர் டில்லி, தொகுதி ஒருங்கிணைப்பாளர் லிங்கப்பன், தொகுதி செயலாளர் ஞானம் ஆகியோர் கலந்துகொண்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர்.