பள்ளிப்பட்டு: பள்ளிப்பட்டு அருகே சந்திரமவுலீஸ்வரர் ஆலயத்தில் விநாயகர், பாலமுருகர், ஆஞ்சநேயருக்கு பிரதிஷ்டை செய்யப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே கோணசமுத்திரத்தில் 600 ஆண்டுகள் பழமை வாய்ந்த காமாட்சி சமேத சந்திரமவுலீஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் மகா சிவராத்திரி விழா மற்றும் மாதம்தோறும் பிரதோஷம், பூஜைகள் நடைபெற்று ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்கின்றனர். இந்நிலையில், கோயில் வளாகத்தில் புதிதாக விநாயகர், பாலமுருகர் மற்றும் பக்த ஆஞ்சநேயர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு கும்பாபிஷேக விழா நேற்று நடைபெற்றது. விழாவையொட்டி கோயில் வளாகத்தில் யாகசாலைகள் அமைக்கப்பட்டு, நித்திய ஹோமம் குண்ட பூஜைகளை தொடர்ந்து, மேள தாளங்கள் முழங்க விநாயகர், பாலமுருகர், பக்த ஆஞ்சநேயருக்கு புனித நீரால் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் கிராம மக்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபட்டனர். பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம், பிரசாதம் வழங்கப்பட்டது.