பல்லடம்: பல்லடம் அருகே வேலம்பட்டியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சுங்கச்சாவடியை இடித்து அகற்ற வேண்டும் என்று வலியுறுத்தி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அவிநாசி முதல் அவிநாசி பாளையம் வரையிலான தேசிய நெடுஞ்சாலையில் வேலம்பட்டியில் புதிதாக சுங்கன்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. இந்த சுங்கச்சவாடியில் நாளை முதல் கட்டணம் வசூலிக்கப்படவுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் புதிய சுங்கச்சாவடியை முழுமையாக இடித்து அகற்ற கோரியும் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அந்த வழியாக சென்ற லாரி மற்றும் பேருந்துகளை நிறுத்தி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நீர்நிலையில் கட்டப்பட்டுள்ள சுங்கன்சாவடியை அகற்ற மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்தும் அதனை நிறைவேற்றாமல் மீண்டும் அதே பகுதியில் தொடங்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். தேசிய நெடுஞ்சாலைக்கு உண்டான திட்டத்தின்படி சுங்கன்சாவடி முழுமை பெறவில்லை என்றும் மாநகராட்சியின் எல்லைக்குள் இருப்பதால் சுங்கக்கட்டணம் வசூலிக்க தகுதியற்ற சாலையென்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இதனிடையே கார், ஜீப், வேன் மற்றும் கனரக வாகனங்கள், பேருந்து, லாரி ஆகிய வாகனங்களுக்கு ரூ.40 முதல் ரூ.275 வரை சுங்கக்கட்டணம் வசூலிப்பதற்கான அறிவிப்புகள் வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.