பல்லடம் : பல்லடம் அருகே கரைப்புதூர் ஊராட்சி பொன் நகரில் பள்ளி கட்டிடம் முன்பு இருந்த கனிமவள பாறை வெட்டி கடத்தப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பல்லடம் ஒன்றியம் கரைப்புதூர் ஊராட்சி காளிநாதம்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளிக்கு போதிய வகுப்பறை இல்லாததால் அருகில் உள்ள பொன்நகர் பகுதியில் இடம் ஒதுக்கீடு செய்து நபார்டு வங்கி மூலம் ரூ. 85 லட்சத்து 44 ஆயிரம் மதிப்பீட்டில் 4 வகுப்பறைகள் கட்டும் பணி நடைபெற்று வருகின்றன.
இந்த வகுப்பறை கட்டும் இடத்திற்கு முன்பு இருந்த கனிம வள பாறைகள் வெட்டி எடுத்து கடத்தப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது: புதிதாக கட்டப்பட்டு வரும் வகுப்பறைகளுக்கு முன்பு இருந்த கனிம வளபாறை வெட்டி எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. இந்த பாறையால் பள்ளிக்கு எவ்விதமான இடையூறும் இல்லை. தற்போது அந்த கனிமவள பாறையை வெட்டி எடுத்து அருகிலேயே கொட்டி வைத்து அதிலிருந்து பாறைகளை எடுத்து கடத்தப்பட்டுள்ளது. கனிமவள பாறையை எதற்காக வெட்டி எடுத்தார்கள் என்று தெரியவில்லை. இது குறித்து மாவட்ட நிர்வாகம் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.