Sunday, September 1, 2024
Home » பாஜ கூடவே இருந்து மக்கள் விரோத செயல்கள் எல்லாவற்றுக்கும் ஆமாம் சாமி போட்டவர் தான் பழனிசாமி: சிறுபான்மையினருக்கு அதிமுக செய்த துரோகத்தை மக்கள் மறக்கவில்லை: முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு

பாஜ கூடவே இருந்து மக்கள் விரோத செயல்கள் எல்லாவற்றுக்கும் ஆமாம் சாமி போட்டவர் தான் பழனிசாமி: சிறுபான்மையினருக்கு அதிமுக செய்த துரோகத்தை மக்கள் மறக்கவில்லை: முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு

by Ranjith

சென்னை: பாஜ கூடவே இருந்து அவர்களின் மக்கள்விரோதச் செயல்கள் எல்லாவற்றுக்கும் ஆமாம் சாமி போட்டவர்தான் எடப்பாடி பழனிசாமி என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். திமுக சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீர வணக்க நாள் பொதுக்கூட்டம் அமைந்தகரை செயின்ட் ஜார்ஜ் பள்ளி மைதானத்தில் நேற்று இரவு நடந்தது. இதில் திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் பேசியதாவது: தமிழுக்காக உயிர் நீத்தவர்கள்தான் மொழிப்போர் தியாகிகள். தியாகிகள் எல்லோருக்கும் வீரவணக்கத்தைச் செலுத்துகிறேன். ஒன்றிய பாஜ அரசு, இந்திமொழியைத் திணிப்பதற்குக் காரணம், இந்தி பேசும் மக்களை ஏமாற்றுவதற்குத்தான்.

பாஜவுக்கு அதிகம் வாக்களிப்பது யார்? வடமாநில மக்கள். குறைந்தபட்சம், இந்தி பேசும் வடமாநில மக்களுக்காவது எந்த நன்மையாவது செய்திருக்கிறார்களா? சமூக வலைத்தளங்களில் நான்கைந்து நாட்களாக ஒரு காணொளி பரவி வருகிறது. ‘எங்களுக்கு படிப்புதான் தேவை’ என்று இந்தியில் பேசும் ஒரு சிறுவனின் பழைய காணொளி அது. இந்த விழிப்புணர்வு ஏற்பட்டு விடக்கூடாது என்று பாஜ நினைக்கிறது. மக்களை ஏமாற்றும் பாஜவின் அரசியலை வடமாநில மக்கள் இனியும் நம்பத் தயாராக இல்லை. இந்த முறை வட மாநிலங்களிலும் பாஜ வெற்றி பெற முடியாது. அதுதான் உண்மை.

இவ்வளவு நாட்களாக பாஜ கூடவே இருந்து அவர்களின் மக்கள்விரோதச் செயல்கள் எல்லாவற்றுக்கும் ஆமாம் சாமி போட்டவர்தான் பழனிசாமி. தன்னுடைய நாற்காலியை காப்பாற்றிக் கொள்வதிலேயே நான்கு ஆண்டுகளை ஓட்டிவிட்டார். பாஜவோடு கூட்டணி வைத்துக் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தையும், மூன்று வேளாண் சட்டங்களையும் ஆதரித்தார். நீட் தேர்வைத் தமிழ்நாட்டுக்குள் நுழையவிட்டார். ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை ஒரே நாளில் யூனியன் பிரதேசமாக மாற்றிய சட்டத்தை ஆதரித்தார். ஜி.எஸ்.டி.யை எதிர்க்காமல் மாநில நிதிநிலையை பாதாளத்துக்குத் தள்ளினார். தமிழ் மொழியைப் புறக்கணித்து இந்தித் திணிப்புக்கு உதவினார். அதனால்தான் மக்களால் தோற்கடிக்கவும் பட்டார்.

பாஜவோடு சேர்ந்து சிறுபான்மைச் சகோதரர்களுக்கு அவரும் அதிமுகவும் செய்த துரோகத்தை மறைத்து இப்போது ஒரு நாடகம் போடுகிறார். அதைத்தான் தம்பி தயாநிதி சொன்னார். ஆனால் சிறுபான்மையின மக்கள் அவர் செய்த துரோகங்களை மறக்கவில்லை, மறக்கவும் மாட்டார்கள். நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.வும் அ.தி.மு.க.வும் எல்லா இடத்திலும் தோற்கடிக்கப்பட வேண்டும். இந்தியா கூட்டணியின் வெற்றியில் தான் இந்தியாவின் எதிர்காலமே இருக்கிறது. இந்தியா கூட்டணியின் ஆட்சி உண்மையான கூட்டாட்சியாக அமையும்.

எல்லோருக்கும் எல்லாம் என்ற சமநிலைச் சமுதாயத்தை அமைக்க மொழிப்போர் தியாகிகளின் தியாகத்தின்மீது உறுதி ஏற்போம். இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, எம்பிக்கள் தயாநிதி மாறன், கலாநிதி வீராசாமி, என்.ஆர்.இளங்கோ, மாவட்ட செயலாளர்கள் சிற்றரசு, மாதவரம் சுதர்சனம், மயிலை த.வேலு, இளைய அருணா, எம்.கே.மோகன் எம்எல்ஏ, சென்னை மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார், அன்பகம் கலை, பகுதி செயலாளர்கள் ராமலிங்கம், மா.பா.அன்புத்துரை, பரமசிவம், காமராஜ், சேப்பாக்கம்-திருல்லிக்கேணி மருத்துவர் அணி அமைப்பாளர் டாக்டர் சீனிவாசன், தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணை செயலாளர் கார்த்திக் மோகன், சென்னை மேற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர்கள் சரவணன், மு.வினோத், எம்.கே.மோகன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

You may also like

Leave a Comment

one × 2 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi