பழநி : பழநி கோயிலில் குரங்கு கூட்டம் கோஷ்டி சண்டையில் ஈடுபடும் வீடியோ வைரலாகி வருகிறது.தமிழகத்தில் அதிக பக்தர்கள் வரும் கோயில்களில் முதன்மையானது பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில். இங்கு வரும் பக்தர்கள் வீசி எறியும் உணவுகளை உட்கொள்ள குரங்குகள் அதிகளவு வலம் வருகின்றன. இந்த குரங்குகள் சில சமயம் பக்தர்கள் கொண்டு வரும் பிரசாத பைகள், பர்ஸ்கள்,செல்போன் போன்றவற்றையும் பறித்து செல்கின்றன.
இதனால் குரங்குகள், அவ்வப்போது வனத்துறை மூலம் கூண்டு வைத்து பிடிக்கப்பட்டு, வனப்பகுதிக்குள் கொண்டு சென்று விடப்பட்டு வருகின்றன.ஆனாலும், பழநி கோயிலில் குரங்குகளின் கூட்டம் குறையவில்லை. கடந்த 3 நாட்களுக்கு முன்பு மலைக்கோயிலில் 50க்கும் மேற்பட்ட குரங்குகள் ஒரே இடத்தில் திரண்டு, கடும் கூச்சலுடன் ஒன்றையொன்று தாக்கி கொண்டன. இதனை பக்தர் ஒருவர் தனது செல்போனில் வீடியோ பதிவு செய்துள்ளார்.
இந்த வீடியோ பதிவு, தற்போது வாட்ஸ் அப், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. எனவே கோயில் நிர்வாகம், வனத்துறை மூலம் பழநி மலைக்கோயிலில் சுற்றித்திரியும் குரங்குகளை பிடித்து வனப்பகுதிக்குள் விட நடவடிக்கை எடுக்க வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.