திருமலை: பாகிஸ்தானை சேர்ந்த பெண் தீவிரவாதிக்கு உள்நாட்டு ரகசியங்களை தெரிவித்த சிஐஎஸ்எப் வீரர் அதிரடியாக கைது செய்யப்பட்டார். பாகிஸ்தான் பெண்ணுடன் அவர் தினமும் நிர்வாண வீடியோ கால் செய்து வந்தது அம்பலமாகியுள்ளது.
குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர் கபீல் என்கிற ஜெகதீஷ்பாய்முராரி (35). இவர் மத்திய தொழிற்பாதுகாப்பு படையில் (சிஐஎஸ்எப்) வீரராக உள்ளார். இவருக்கு ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் இரும்பு உருக்காலையில் பாதுகாப்பு பணி வழங்கப்பட்டிருந்தது.
இவருக்கும் பாகிஸ்தானை சேர்ந்த சமித்ஷா (28) என்ற இளம்பெண்ணுக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் இருவரும் செல்போன் எண்களை பரிமாறிக்கொண்டு அடிக்கடி பேசி வந்துள்ளனர்.
அதன்பின்னர் அந்த பெண், கபீலை தேடி விசாகப்பட்டினத்திற்கு சில மாதங்களுக்கு முன்பு வந்துள்ளார். அவருடன் கபீல், லாட்ஜில் அறை எடுத்து தங்கியுள்ளார். இதனிடையே கபீலின் செல்போனுக்கு அடிக்கடி பாகிஸ்தானில் இருந்து அழைப்புகள் வருவதை இந்திய உளவுத்துறை தொடர்ந்து கண்காணித்து வந்தது.
அவரது செல்போன் உரையாடல் குறித்து `ரா’ அமைப்பு விசாரித்தது. அதில், இரும்பு உருக்காலை மற்றும் பாரத் டைனமிக் நிறுவனத்தின் தொழிற்நுட்ப ரகசியங்கள் மற்றும் உள்நாட்டு ரகசியங்கள் குறித்து பாகிஸ்தான் பெண்ணுக்கு கபீல் உளவு சொன்னது தெரியவந்தது. மேலும் பாகிஸ்தான் பெண்ணும், கபீலும் அடிக்கடி இரவு நேரத்தில் நிர்வாண நிலையில் வீடியோ காலில் பேசி வந்ததும் தெரிந்தது. பாகிஸ்தான் பெண் குறித்து ‘ரா’ அமைப்பு விசாரணை நடத்தியதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
அந்த பெண், பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாதி ஒருவரின் தனிப்பட்ட உதவியாளர் என்பதும், கபீலுடன் தொடர்பு ஏற்படுத்திக்கொண்டு உள்நாட்டு ரகசியங்களை அறிந்து தங்களது தீவிரவாத அமைப்புக்கு தெரிவித்து வந்ததும் தெரிந்தது.
இதையடுத்து கபீலை நேற்று உளவுத்துறையினர் கையும் களவுமாக கைது செய்து ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர். அவரிடம் இருந்த 3 செல்போன்களையும் பறிமுதல் செய்தனர். மேலும் பேஸ்புக்கில், பாகிஸ்தான் பெண்ணுடன் செய்த சாட்டிங் குறித்தும் விசாரிக்கின்றனர்.
இதுகுறித்து விசாகப்பட்டினம் கமிஷனர் திருவிக்ரமவர்மா உத்தரவின்பேரில் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதாக கூறி கபீல் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே விசாகப்பட்டின கடற்படையில் உளவுபார்த்து பாகிஸ்தானுக்கு தகவல் அனுப்பியதாக சில மாதங்களுக்கு முன்பு 11 கடற்படை அதிகாரிகள் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது சிஐஎஸ்எப் வீரர் ஒருவர் சிக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது. கைதான கபீலுக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளனர்.