இஸ்லாமாபாத் : மின் கட்டண உயர்வை கண்டித்து பாகிஸ்தானில் ஆயிரக்கணக்கான பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பாகிஸ்தானில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தில் 70% இறக்குமதி செய்யப்பட்ட எரிபொருளை சார்ந்துள்ளது. அங்கு மின்சார கட்டணம் வெறும் 15 மாதங்களில் 4 மடங்கிற்கு மேல் அதிகரித்து இருப்பதாக கூறப்படுகிறது. இம்ரான் கான் ஆட்சி காலத்தில் ஒரு யூனிட்டுக்கு 16 ரூபாயாக இருந்த மின்சார கட்டணம் ஆட்சி மாற்றத்திற்கு பிறகு யூனிட்டிக்கு 68 ரூபாயாக உயர்ந்துள்ளது.
மின் கட்டணம் உயர்த்தப்பட்டதை அடுத்து, பல நகரங்களில் பொதுமக்களும் தொழிற்சங்கத்தினரும் போராட்டம் நடத்தி வரும் நிலையில், கராச்சியில் ஆயிரக்கணக்கான பெண்கள் ஒன்று திரண்டனர். அப்போது மின் கட்டண உயர்வை திரும்பப் பெற கோரி பதாகைகளை ஏந்தி அரசுக்கு எதிராக முழக்கமிட்ட பெண்களில் சிலர் மின் கட்டண ரசீதை கொளுத்தினர். ஏற்கனவே பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள பாகிஸ்தானில் பெட்ரோல்,ட டீசல் விலை உயர்வை தொடர்ந்து மின் கட்டணமும் உயர்ந்து இருப்பதால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.