புதுடெல்லி: ரஷிய தலைநகர் மாஸ்கோவில் உள்ள இந்திய தூதரகத்தில் பணியாற்றி வந்த உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த நபரை, ஏடிஎஸ் கைது செய்த நிலையில், அவர் பெண் ஒருவரிடம் தெரியவந்துள்ளது. உத்தர பிரதேச மாநிலம் ஷாமஹிதின்பூர் பகுதியைச் சேர்ந்த வெளியுறவுத்துறை அமைச்சக பணியாளரான சதேந்திர சிவால் என்ற நபர், மாஸ்கோவிலுள்ள இந்திய தூதரகத்தில் பணியாற்றி வந்தார். அவர் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ-க்கு உளவு பார்த்ததாக குற்றஞ்சாட்டப்பட்டது.
ஐஎஸ்ஐ அமைப்பிடம் பாதுகாப்புத்துறை, வெளியுறவுத்துறை அமைச்சகங்கள் சார்ந்த முக்கியமான உயர்மட்ட தகவல்களை அந்த நபர் பகிர்ந்துள்ளதாகவும், இந்திய ராணுவ தளவாடங்கள் குறித்த முக்கிய தகவல்களையும் ஐஎஸ்ஐ அமைப்பிடம் வழங்கியதாக உத்தரப்பிரதேச தீவிரவாத தடுப்புப் படை (ஏடிஎஸ்) அறிவித்தது. ஐஎஸ்ஐ அமைப்பு சில தரகர்கள் மூலம், வெளியுறவுத்துறை அமைச்சக பணியாளர்களை பணத்தை காண்பித்து ஆசை வார்த்தை கூறி, அவர்கள் மூலம் முக்கிய தகவல்களை பெற்று வருவதாக தீவிரவாத தடுப்புப் படையினருக்கு தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டது.
தொடர்ந்து சதேந்திர சிவாலிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இதுகுறித்து ஏடிஎஸ் இன்ஸ்பெக்டர் ராஜீவ் தியாகி கூறுகையில், ‘கைது செய்யப்பட்ட சதேந்திர சிவால், இந்திய போர் விமானங்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள் உள்ளிட்ட இந்திய விமானப்படை மற்றும் கடற்படையின் ரகசிய ஆவணங்களை பெண் ஒருவருக்கு பகிர்ந்துள்ளார்.
பாகிஸ்தானை சேர்ந்த அந்தப் ெபண்ணின் பெயர் பூஜா மெஹ்ராவ் என்பது உறுதிசெய்யப்பட்டது. ஆன்லைன் மூலம் இருவருக்கும் நட்பு ஏற்பட்டுள்ளது. இருவரும் கடந்த ஓராண்டாக தொடர்பில் இருந்துள்ளனர். அந்தப் பெண்ணுக்கு பகிர்ந்த ரகசிய ஆவணங்கள், இன்னும் அவரது தொலைபேசியில் உள்ளது. எனவே அவரது தொலைபேசி மற்றும் அவர் பயன்படுத்திய பிற கருவிகள் அனைத்தும், தடயவியல் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. மேலும், அந்த பெண்ணின் சமூக வலைதள கணக்கானது, பாகிஸ்தானின் உளவுத்துறையால் கையாளப்பட்டு வருவதும் உறுதி செய்யப்பட்டது’ என்று தெரிவித்தார்.