ஐதராபாத்: ஐசிசி உலக கோப்பை ஒருநாள் போட்டித் தொடரின் லீக் ஆட்டத்தில், பாகிஸ்தான் அணி 81 ரன் வித்தியாசத்தில் நெதர்லாந்து அணியை வீழ்த்தியது. ராஜிவ் காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற நெதர்லாந்து அணி முதலில் பந்துவீசியது. தொடக்கத்தில் 38 ரன்னுக்கு 3 விக்கெட் இழந்து தடுமாறிய பாகிஸ்தான் அணி, பின்னர் முகமது ரிஸ்வான் – சவுத் ஷகீல் ஜோடியின் பொறுப்பான ஆட்டத்தால் சரிவில் இருந்து மீண்டது. இருவரும் அரை சதம் அடித்து அசத்தினர்.
ஷகீல் 68 ரன் (52 பந்து, 9 பவுண்டரி, 1 சிக்சர்), ரிஸ்வான் 68 ரன் (75 பந்து, 8 பவுண்டரி), முகமது நவாஸ் 39, ஷதாப் கான் 32 ரன் எடுக்க, பாகிஸ்தான் 49 ஓவரில் 286 ரன் குவித்து ஆல் அவுட்டானது. நெதர்லாந்து தரப்பில் பாஸ் டி லீட் 4 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து களமிறங்கிய நெதர்லாந்து 41 ஓவரில் 205 ரன் எடுத்து ஆல் அவுட்டாக, பாகிஸ்தான் 81 ரன் வித்தியாசத்தில் வென்றது. நெதர்லாந்து தரப்பில் விக்ரம்ஜித் 52, பாஸ் டி லீட் 67, லோகன் வான் பீக் 28 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் கணிசமாக ரன் குவிக்கத் தவறினர்.