இந்தூர்: கொரோனா ஊரடங்கின்போது தாயை வீட்டை விட்டு துரத்திய மகள், மாதந்தோறும் ரூ.3ஆயிரம் பராமரிப்பு தொகை வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மத்தியப்பிரதேச மாநிலம், இந்தூரில் 78வயது மூதாட்டி ஒருவர் குடும்ப நீதிமன்றத்தில் தனது மகளுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார். தனது வங்கி கணக்கில் இருந்த சேமிப்பு மற்றும் வீட்டை விற்று வைத்திருந்த பணம் உள்ளிட்டவற்றை எடுத்துக்கொள்வதாகவும், தன்னை முழுவதுமாக கவனித்துக்கொள்கிறேன் என்று உறுதியளித்தார்.
ஆனால் பணம் அனைத்தையும் பறித்துக்கொண்ட பின்னர் கொரோனா ஊரடங்கின்போது தன்னை சித்ரவதை செய்ததாகவும், வீட்டை விட்டு வெளியே துரத்தியதாகவும் அந்த மூதாட்டி புகாரில் கூறியிருந்தார். இந்த வழக்கு விசாரணை இந்தூர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் கடந்த 17ம் தேதி கூடுதல் முதன்மை நீதிபதி மாயா விஸ்வாலால் அளித்த தீர்ப்பில், மனுதாரருக்கு அவரது மகள்(55) மாதம் ரூ.3000 பராமரிப்பு தொகையாக வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டு இருந்தார்.