முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பாஜ கூட்டணியில் போட்டியிட உள்ளதாக கூறி வரும் நிலையில் அவரை தாமரை சின்னத்தில் போட்டியிடுமாறு பாஜ தலைமை வலியுறுத்துவதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஓ.பன்னீர்செல்வம் நேற்று அதிகாலை நடை திறந்தவுடன் வந்து மூலவரான முருகப்பெருமானை விஸ்வரூப தரிசனத்தில் வழிபட்டார். பின்னர் அவசர அவசரமாக புறப்பட்ட ஓ.பன்னீர்செல்வத்திடம் செய்தியாளர்கள் கேள்வி கேட்டதற்கு சுவாமி தரிசனம் செய்வதற்காக தான் வந்தேன் என கூறிவிட்டு வேகமாக காரில் விரைந்தார்.
அதிமுக சின்னத்தையோ கொடியையோ பயன்படுத்தக்கூடாது என ஓபிஎஸ்க்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்ததால் அவர், காவி வேஷ்டியுடன் சாமி தரிசனம் செய்தது பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. இதேபோல் திண்டுக்கல் மாவட்டம், பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலில் ஓபிஎஸ் நேற்று வழிபாடு செய்தார். தொடர்ந்து ஓபிஎஸ் தனது பெயரிலும், பிரதமர் நரேந்திர மோடி பெயரிலும் 2 நிலைகளில் தங்கரதம் இழுத்தார். பின்னர் ரோப்கார் மூலம் அடிவாரம் சென்று காரில் சேலம் புறப்பட்டார்.
* இரட்டை இலை இல்லை என்றால் வாழை இலை: மன்சூர் அலிகான் ‘கலகல’
வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் நடிகர் மன்சூர் அலிகான் போட்டியிடுவதாக தெரிவித்துள்ளார். வேலூரில் நேற்று முன்தினம் பிரசாரம் செய்தபோது அவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘நான் நின்றால் மாநாடு. நடந்தால் ஊர்வலம். அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை குறித்து பேசிவிட்டு வந்தேன். அதுகுறித்து இன்னும் ஏதும் தகவல் இல்லை. நான் இங்கே நிற்கிறேன் அவர்கள் கொடுத்தால் இரட்டை இலை. இல்லையென்றால் வாழை இலை. இலை போட்டு உட்கார்ந்து சாப்பிட வேண்டியதுதான். வாழை இலை உடம்புக்கு நல்லது. இரட்டை இலையும் உடம்புக்கு நல்லது. கறிவேப்பிலையாக மாறிவிடக்கூடாது’ என்றார். இந்நிலையில், நேற்று காலை வேலூர் கோட்டைக்கு மன்சூர் அலிகான் வந்தார். அப்போது அங்கிருந்த பொதுமக்கள் ‘நீங்கள் எந்த கட்சியுடன் சேர்ந்து போட்டியிட போகிறீர்கள் எனக்கேட்டனர். அதற்கு பதிலளித்த மன்சூர்அலிகான், ‘நான் வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் நிற்கிறேன். பேச்சுவார்த்தையில் உடன்பட்டால் கூட்டணி, இல்லையென்றால் கூட்டு ஆணி’ என்றார். இதைக்கேட்டதும் நடைபயிற்சி மேற்கொண்டிருந்தவர்கள் நல்ல காமெடிதான் என்று கூறியபடி சென்றனர்.
* இரட்டை இலை சின்னம் கிடைத்த கதை தெரியுமா?
அதிமுக கொடி, சின்னத்தை ஓபிஎஸ் அணி பயன்படுத்த தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சின்னத்துக்காக தொடர்ந்து மல்லுக்கட்டு நடக்கிறது. ஆனால், இந்த இரட்டை இலை சின்னம் கிடைத்த கதை தெரியுமா? எம்ஜிஆர் அதிமுகவை தொடங்கிய காலத்தில் திண்டுக்கல் எம்பி தொகுதிக்கு 1973ம் ஆண்டு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதுதான் அதிமுக போட்டியிடும் முதல் தேர்தல். கட்சியின் அறிமுக வேட்பாளராக யாரை தேர்வு செய்வது என்ற நீண்ட யோசனைக்கு, மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே டி.உச்சப்பட்டியை சேர்ந்த மாயத்தேவர் களமிறக்கப்பட்டார். இவர் சென்னை ஐகோர்ட்டில் வக்கீலாக பணியாற்றியவர். அப்போது அதிமுக கட்சிக்கு சின்னத்தை தேர்வு செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டது.
சின்னத்தை தேர்வு செய்யும் பொறுப்பையும் வேட்பாளரான மாயத்தேவரிடமே வழங்கினார் எம்ஜிஆர். அப்போது அவர் சுயேச்சை சின்னமாக டிக் செய்தது இரட்டை இலை. இச்சின்னத்தில் போட்டியிட்ட மாயத்தேவர் வெற்றி பெற்றார். இந்த வெற்றி சென்டிமென்ட் காரணமாக, இரட்டை இலையே அதிமுகவின் சின்னமானது. மாயத்தேவர் 1977ல் நடந்த எம்பி தேர்தலிலும், இரட்டை இலை சின்னத்தில், திண்டுக்கல்லில் போட்டியிட்டு 2வது வெற்றியையும் பெற்றார். பின்னர் அவர் திமுகவில் இணைந்து 1980ம் ஆண்டு எம்பி தேர்தலிலும் போட்டியிட்டு மீண்டும் எம்பி ஆனது குறிப்பிடத்தக்கது.
வயது மூப்பு காரணமாக கடந்த 2022ம் ஆண்டு காலமானார். இரட்டை இலையை தேர்வு செய்தது ஏன் என்பது குறித்து, அப்போது மாயத்தேவர் கூறியது என்ன தெரியுமா? இங்கிலாந்தின் வின்சென்ட் சர்ச்சில் வெற்றியை குறிக்கும் விதமாக ‘வி’ வடிவில் தனது இரண்டு விரலை உயர்த்திக் காட்டுவார். இதேபோல் நாமும் இரட்டை இலை சின்னத்தை பெற்றால் வெற்றிக்கு அடையாளமாக இரண்டு விரலை காட்டலாம். இரட்டை இலையை குறிக்கும் விதமாகவும் இருக்கும் என்பதால் இச்சின்னத்தை தேர்வு செய்ததாகத் தெரிவித்துள்ளார். எந்த எம்பி தேர்தலில் இரட்டை இலை சின்னத்தை அதிமுக பெற்றதோ, இன்று அதே எம்பி தேர்தலில் இரட்டை இலை சின்னத்திற்காக இபிஎஸ், ஓபிஎஸ் தரப்பினர் ‘எம்பி எம்பி’ மல்லுக்கட்டுகிறார்கள் என்பது காலம் நமக்கு சொல்லும் சேதி.
* மாவட்டம் ஒன்றுதான் ஆனா எம்பி மட்டும் 3
மாவட்டத்திற்கு ஒரு எம்பி என்பது சராசரியாக இருந்தாலும், மதுரை மாவட்டமோ 3 எம்பிக்களை கொண்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் நடக்கும் வளர்ச்சி திட்ட பணிகள் தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் 3 எம்பிக்களும் பங்கேற்கும் சூழலே உள்ளது. மதுரை மாவட்டத்தை பொறுத்தவரை மேலூர், மதுரை கிழக்கு, மதுரை வடக்கு, மதுரை மத்தி, மதுரை தெற்கு, மதுரை மேற்கு, திருப்பரங்குன்றம், திருமங்கலம், உசிலம்பட்டி மற்றும் சோழவந்தான் ஆகிய 10 சட்டமன்ற தொகுதிகள் அமைந்துள்ளன. இந்த 10 தொகுதிகளுக்குள் 3 எம்பிக்கள் உள்ளனர்.
மேலூர், மதுரை கிழக்கு, மதுரை மத்தி, மதுரை வடக்கு, மதுரை தெற்கு, மதுரை மேற்கு ஆகிய சட்டமன்ற தொகுதிகள் மதுரை நாடாளுமன்ற தொகுதியாகவும், திருமங்கலம் மற்றும் திருப்பரங்குன்றம் தொகுதியின் சரிபாதி பகுதி விருதுநகர் நாடாளுமன்ற தொகுதிக்குள்ளும் வருகிறது. இதேபோல் சோழவந்தான் மற்றும் உசிலம்பட்டி சட்டமன்ற தொகுதிகள் தேனி நாடாளுமன்ற தொகுதிக்குள் வருகிறது. இதன் மூலம் 10 சட்டமன்ற தொகுதிகளைக் கொண்டுள்ள மதுரை மாவட்டத்திற்கு மட்டும் 3 எம்பிக்கள் கிடைத்துள்ளனர். இந்த தேர்தலிலும் மதுரை மாவட்ட மக்கள் தங்களுக்காக பணியாற்ற 3 நாடாளுமன்ற உறுப்பினர்களை தேர்வு செய்ய உள்ளது குறிப்பிடத்தக்கது.