ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் சுயேச்சையாக போட்டியிடும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பிரச்சார வாகனத்தில் தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர். ஓ.பி.எஸ். ராமநாதபுரத்தில் இன்று பிரச்சாரம் மேற்கொள்ள உள்ள நிலையில் அவரது பிரச்சார வாகனத்தில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது.
ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சுயேச்சையாக போட்டியிடுவதாக அறிவித்து ராமநாதபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில் இன்று ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள திருப்புல்லாணி, பெரியபட்டினம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ள நிலையில் ஓ.பி.எஸ் பிரச்சாரத்திக்கு செல்லும் வாகனத்தில் கணேசமூர்த்தி என்ற தேர்தல் அலுவலர் தலைமையிலான அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
அதே போல் ஓ.பி.எஸ்-ன் பிரச்சார வாகனத்திற்கு பின்னால் வந்த நடிகையும், பாஜக பிரமுகருமான ரஞ்சனா நாச்சியாருடைய காரையும் நிறுத்தி தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டனர். பறக்கும் படையினரின் சோதனையில் எந்தவொரு பரிசுபொருளும், பணமும் கைப்பற்றவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.