சேலம்: எடப்பாடியில் ஓபிஸ் அணி சார்பில் நடைபெற இருக்கும் நிர்வாகிகள் கூட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகளை அதிமுகவினர் கிழித்து எறிந்ததால் பரபரப்பு நிலவியது. அமமாமுக பொதுச்செயலாளர் டி.டிவி.தினகரனுடன் இணைந்து செயல்பட இருப்பதாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் அறிவித்த பிறகு முதல் நிர்வாகிகள் கூட்டமானது இன்று நடைபெற இருக்கிறது. இந்த கூட்டம் சேலம் மாவட்டம் எடப்பாடியில் உள்ள தனியார் மண்டபத்தில் மாலை 3 மணியளவில் நடைபெறவுள்ளது.
இதில் முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கம், மனோஜ் பாண்டியன், புகழேந்தி உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர். அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் உச்சநீதிமன்றம் பழனிச்சாமிக்கு சாதகமான தீர்ப்பை அளித்த பிறகு கட்சி கொடி மற்றும் அதிமுக பெயரை பயன்படுத்த கூடாது என அதிமுகவினர் கூறி வருகின்றனர். ஆனால் அதனை மீறி ஓபிஸ் அணி அதிமுக பெயருடன் சுவரொட்டிகள் ஒட்டியதாக தெரிகிறது.இதனால் ஆத்திரமடைந்த அதிமுகவினர் சுவரொட்டிகளை கிழித்து எறிந்தனர். தகவல் அறிந்து வந்த காவலர்கள் கொடிகளை பயன்படுத்தாமல் நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டத்தை மட்டும் நடத்தி செல்லும்படி ஓ.பன்னீர் செல்வம் தரப்பிற்கு அறிவுறுத்தியுள்ளதுடன், பாதுகாப்பு பணியிலும் ஈடுபட்டுள்ளனர்.