டெல்லி: ஓபிஎஸ்-க்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கு விசாரணைக்கு தடைவிதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. கடந்த 2001-2006ம் ஆண்டு காலகட்டத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா தலையிலான அமைச்சரவையில் வருவாய்த்துறை அமைச்சராக பதவி வகித்தபோது வருமானத்துக்கு அதிகமாக ரூ.1.77கோடி அளவிற்கு சொத்துக்களை குவித்தாக 2006ம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிராக வழக்கை பதிவு செய்தது.
இந்த வழக்கு மதுரை நீதிமன்றத்தில் இருந்து சிவகங்கை நீதிமன்றத்துக்கு மாற்றி 2017ம் ஆண்டு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது. மீண்டு அதிமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன் இந்த வழக்கு தொடர்வதற்கான அனுமதியை திரும்பப்பெற்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து இந்த உத்தரவை ஏற்று நீதிமன்றம் ஓ.பன்னீர்செல்வத்தை விடுவித்து உத்தரவிட்டது. இந்த உத்தரவை மறுஆய்வு செய்வதற்காக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் மதம் விசாரணைக்கு எடுத்துள்ளார்.
இந்நிலையில், தனக்கு எதிரான சொத்துகுவிப்பு வழக்குக்கு தடை கோரி முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தாக்கல் செய்த மேல்முறையீடு மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் ரிஷிகேஷ் ராய், பிரசன் குமார் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஓபிஎஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் முன்னாள் அமைச்சர் வளர்மதி விவகாரத்தில் உள்ள அனைத்து அம்சங்களும் இந்த வழக்கில் பொருந்தும் என வாதிட்டார். ஆனால் அதனை ஏற்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. மனுதாரர் முன்னாள் முதல்வர் தற்போது எந்த அதிகாரத்திலும் இல்லை என்றும், முன்னாள் அமைச்சர் வளர்மதி விவகாரத்தில் தெரிவிக்கப்பட்ட அம்சங்கள் இந்த வழக்கில் எப்படி பொருந்தும்? என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
மேலும், இந்த விவகாரத்தில் தனி நீதிபதி தெரிவித்த கருத்துக்களை கருத்தில் கொள்ளாமல் வழக்கை விசாரிக்க வேண்டுமென்றும், இதற்கு தடை விதிக்க முடியாது என்றும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தாக்கல் செய்த மனுவை திரும்பப்பெற அனுமதி அளித்து தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர். இதன்மூலம் ஓபிஎஸ் மீதான சொத்துகுவிப்பு வழக்கு தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெறும் என்பது தெளிவாகிறது.