காரைக்கால்: காரைக்கால் அருகே திருநள்ளாறில் ரூ.7.20 ேகாடியில் ஆன்மீக பூங்காவை புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி திறந்து வைத்தார். காரைக்கால் அடுத்த திருநள்ளாறில் உள்ள உலகபுகழ் பெற்ற சனீஸ்வர பகவான் கோயிலுக்கு உள்ளூர் மட்டுமல்லாமல் வெளிமாநில பக்தர்கள் அதிகமாக வந்து செல்வது வழக்கம். இந்நிலையில் இந்த கோயில் அருகில் சுற்றுலாத்துறை சார்பில் ரூ.7.20 கோடியில் 21,897 சதுர மீட்டர் பரப்பளவில் ஆன்மீக பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆன்மீக பூங்காவில், 9 நவக்கிரக மூர்த்திகளின் சன்னதிகள், தியான மண்டபம், தீர்த்த குளங்கள், மூலிகைசெடி வனங்கள் மற்றும் சுற்றுலா பயணிகள், ஆன்மீக வாதிகளை கவரும் வகையில் பல அம்சங்கள் இடம் பெற்றுள்ளது.
பூங்காவில் 100 பேர் அமர்ந்து தியானம் செய்வதற்கு வசதியாக குளோப் வடிவில் அமைக்கப்பட்டுள்ள தியான மண்டபத்தை பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்துள்ளது. இந்நிலையில் காரைக்காலுக்கு வருகை தந்த புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி, நேற்றுமுன்தினம் இரவு மக்கள் பயன்பாட்டிற்காக ஆன்மீக பூங்காவை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அமைச்சர்கள் லட்சுமி நாராயணன், சந்திரபிரியங்கா, கலெக்டர் குலோத்துங்கன், திருநள்ளாறு எம்எல்ஏ, பி.ஆர்.சிவா மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து பூங்காவின் வளர்ச்சிகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்ட முதல்வர்
ரங்கசாமி, ஆர்வத்துடன் பூங்கா முழுவதையும் சுற்றி பார்த்தார்.