உதகை: உதகையில் அதிமுகவினருக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அதிமுக வேட்பாளர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் வேட்பு மனு ஊர்வலத்தின் போது எஸ்.பி. வாகனத்தை அதிமுகவினர் தாக்கினர். பாஜகவினர் ஊர்வலம் சென்றதால் சற்றுநேரம் கழித்து செல்லுமாறு போலீசார் அதிமுகவினரிடம் கூறியுள்ளனர். தடுப்புகளை உடைத்துக் கொண்டு செல்ல முயன்றவர்களை தடுத்ததால் அதிமுகவினருக்கும் போலீசாருக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
அடுத்த மாதம் 19ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனையொட்டி பல்வேறு கட்சிகளை சார்ந்த வேட்பாளர்கள் தங்களது வேட்புமனுவை தாக்கல் செய்து வரும் நிலையில் நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் மற்றும் அதிமுக வேட்பாளர் இருவரும் ஒரே நாளில் தங்களது வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளனர்.
முன்னதாக அவர்கள் அனைவரும் உதகை தொகுதியிலிருந்து ஊர்வலமாக புறப்படும் நேரத்தில் பாஜக வேட்பாளர் எல்.முருகன் 11 மணியிலிருந்து 12 மணிக்குள் நேரம் கேட்டிருந்த நிலையில் அவருக்கு ஒதுக்கிய நேரத்தில் அவர் வரவில்லை தாமதமாக வந்தடைந்தார். அதேபோல் அதிமுக வேட்பாளர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் 11 மணியிலிருந்து 12 மணி வரை நேரம் கேட்டிருந்தார். அதற்கான அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில் பாஜக வேட்பாளர் எல்.முருகன் மற்றும் மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் வர தாமதமானதால் ஒரே இடத்தில அதிமுக மற்றும் பாஜக தொண்டர்கள் ஆயிரத்திற்கும் மேல் திரண்டனர். இதனால் இருதரப்பினருக்குமிடையே சலசலப்பு ஏற்பட்டது.
அப்போது பாஜக வேட்பாளர் ஊர்வலமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனுதாக்கல் செய்ய வந்தபோது, அவர்களுக்கு பின்னாலே அதிமுக வேட்பாளர்களும் வந்தனர். அப்போது இருதரப்பினருக்குமிடையே மோதல் ஏற்படும் சூழல் நிலவியதையடுத்து போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடுப்புகளை அமைத்து அதிமுக வேட்பாளர்களை சிறுது நேரம் நிறுத்தி செல்லுமாறு வலியுறுத்தினர்.
இதனை கேட்க மறுத்த அதிமுக வேட்பாளர்கள் மற்றும் தொண்டர்கள் அனைவரும் போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் இதனை கண்டித்து கட்சி தொண்டர்கள் 1000க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.