ஊட்டி: ஊட்டி அரசு கலைக்கல்லூரியில் மாணவர்களுக்கு துறைகளை மாற்றவும், விடுதி ஒதுக்கீடு செய்யவும் பணம் பெற்றதாக எழுந்த சர்ச்சையில் கல்லூரி முதல்வர், பேராசிரியர் அதிரடியாக சஸ்
ெபண்ட் செய்யப்பட்டனர். நீலகிரி மாவட்டம் ஊட்டி அரசு கலைக்கல்லூரியில், ஊட்டி, குன்னூர், மஞ்சூர் மற்றும் கோத்தகிரி போன்ற பகுதிகளை சேர்ந்த கூலித்தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் குழந்தைகளே அதிகளவு படிக்கின்றனர். இந்த கல்லூரியில் 4,500 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். பெரும்பாலான மாணவர்கள் சமவெளி பகுதிகளில் இருந்து வந்தும் இங்கு பயிலுகின்றனர்.
இந்த கல்லூரியில் துறை மாற்றம் கோரி விண்ணப்பித்த மாணவர்களிடம் பேராசிரியர் ரவி, ₹2 ஆயிரம் முதல் ₹5 ஆயிரம் வரை பணம் பெற்றுக்கொண்டு, மாற்றி கொடுத்துள்ளார். ‘கூகுள் பே’ மூலம் பணத்தை அந்த பேராசிரியர் பெற்று கொண்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பான வீடியோ ஒன்று கடந்த ஒரு வாரமாக சமூக வலைத்தளங்களில் வைரலானது. அதில், ஊட்டி அரசு கலைக்கல்லூரி முதல்வர் அருள் ஆண்டனி, ஆதி திராவிடர் மாணவர்களுக்கு விடுதிகளில் இடம் ஒதுக்கீடு செய்வதற்காக பணம் பெறும் காட்சிகள் இடம்பெற்றிருந்தது.
இது குறித்து உயர் கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். இதில், ஊட்டி அரசு கலைக்கல்லூரி முதல்வர் அருள் ஆண்டனி, பேராசிரியர் ரவி ஆகியோர் மாணவர்களிடத்தில் பணம் பெற்றது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து, இவர்கள் இருவரையும் சஸ்பெண்ட் செய்து உயர்கல்வித்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். சர்ச்சை வீடியோவால் தொடரும் அதிரடி நடவடிக்கை கல்லூரி பேராசிரியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், கலக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.