வத்திராயிருப்பு: பிளவக்கல் பெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில். தண்ணீர் அருந்த காட்டு யானைகள் வருகின்றன.வத்திராயிருப்பில் அமைந்துள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மேகமலை புலிகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. இங்குள்ள வனப் பகுதியில் யானை, புலி, மான், கரடி, சிறுத்தை, காட்டெருமை, காட்டுப்பன்றி உள்ளிட்ட ஏராளமான விலங்குகள் வசித்து வருகின்றன.
கோடை வெயிலின் தாக்கம் காரணமாக வனப் பகுதிகளில் நீர்நிலைகள் தற்போது முழுமையாக வறண்டுள்ளன. இதனால் காட்டு விலங்குகள் தண்ணீர் தேடி அலைகின்றன. இதற்கிடையே பிளவக்கல் பெரியாறு அணையில் தற்போது ஓரளவு தண்ணீர் உள்ளது. கோடை வெயில் வாட்டி வதைக்கும் நிலையில், வன விலங்குகள் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் தேங்கியுள்ள தண்ணீரை குடிக்க வருகின்றன. இதன்படி பெரியாறு அணையை நோக்கி காட்டு யானைகள் வரத் தொடங்கியுள்ளன. இதன்படி பிளவக்கல் பெரியாறு அணைக்கு நேற்று முன்தினம் யானை வந்து தண்ணீர் அருந்தியது.