Monday, May 20, 2024
Home » ஆன்லைன் ரம்மி விளையாட்டு என்பதால் தடை விதித்து சட்டம் இயற்ற முடியாது: விளையாட்டு நிறுவனங்கள் ஐகோர்ட்டில் வாதம்

ஆன்லைன் ரம்மி விளையாட்டு என்பதால் தடை விதித்து சட்டம் இயற்ற முடியாது: விளையாட்டு நிறுவனங்கள் ஐகோர்ட்டில் வாதம்

by Francis

சென்னை: ஆன்லைன் ரம்மி திறமைக்கான விளையாட்டு என்று உச்ச நீதிமன்றம் கூறிய பிறகு அதை அதிர்ஷ்டத்துக்கான விளையாட்டு எனக் கூறி தடை விதித்து சட்டம் இயற்ற முடியாது என்று ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது. ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டத்தை எதிர்த்த வழக்குகள், தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தன. அப்போது, ஆன்லைன் விளையாட்டு நிறுவனம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தஹி, சூதாட்டத்துக்கு எதிராக சட்டம் இயற்ற மாநில அரசுக்கு அதிகாரம் இருந்தாலும், ரம்மியை பொறுத்தவரை திறமைக்கான விளையாட்டு என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது என்று வாதிட்டார். அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் ஆர்.சண்முகசுந்தரம் ஆஜராகி, தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் கேரளா மாநில அரசுகள், சட்டத்தை திருத்தி ஆன்லைன் ரம்மிக்கு தடை விதித்துள்ளன. அந்த சட்ட திருத்தங்களை உயர் நீதிமன்றங்கள் ரத்து செய்தன. இந்த தீர்ப்பை எதிர்த்த வழக்குகளில் உச்ச நீதிமன்றம் எந்த தடையும் விதிக்கவில்லை. தற்போது ஆன்லைன் விளையாட்டுக்களை ஒழுங்குபடுத்துவதாக கூறி தடை செய்யப்பட்டுள்ளது என்றார்.

அதற்கு விளையாட்டு நிறுவனங்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் முகுல் ரோத்தஹி, ஆன்லைன் ரம்மி திறமைக்கான விளையாட்டு என்று உச்ச நீதிமன்றம் கூறிய பிறகு, அதை அதிர்ஷ்டத்துக்கான விளையாட்டு எனக் கூறி தடை விதித்து சட்டம் இயற்ற முடியாது. மக்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக கூறி, பொது சுகாதாரத்தின் அடிப்படையிலும், பொது ஒழுங்கு அடிப்படையிலும் இச்சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. வீட்டில் ஆன்லைனில் ஆடப்படும் விளையாட்டால் பொது ஒழுங்கு எப்படி பாதிக்கிறது. இந்த சட்டத்தை இயற்ற மாநில அரசுக்கு அதிகாரமில்லை. இதையடுத்து, ஆன்லைன் ரம்மி விளையாட்டு நிறுவனம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, திறமைக்கான விளையாட்டுக்களில் அதிர்ஷ்டத்துக்கான வாய்ப்புகள் இருந்தால் அந்த விளையாட்டை அதிர்ஷ்டத்துக்கான விளையாட்டாக கூறமுடியுமா? சதுரங்கம் போல், ரம்மியும் திறமைக்கான விளையாட்டுதான். ஆன்லைனில் விளையாடுவதால் திறமைக்கான விளையாட்டுக்களை அதிர்ஷ்ட விளையாட்டுகளாக கருத முடியாது என்றார்.

ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் கூட்டமைப்பு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஆரியமா சுந்தரம், கூட்டமைப்பின் கட்டுப்பாட்டின்படி திறமைக்கான விளையாட்டுக்களை மட்டுமே வழங்க வேண்டும் என்று உறுப்பு நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. நேரில் இருவரும் விளையாடி 10 ரூபாய் வென்றால் அது சட்டப்பூர்வம். அதையே ஆன்லைனில் செய்தால் சட்ட விரோதமா?. தமிழ்நாடு அரசின் சட்டத்தின் படி, சச்சின் டெண்டுல்கர் நன்றாக விளையாடி ஆட்ட நாயகன் விருது வென்றாலே அது சட்ட விரோதம் ஆகிவிடுகிறது. தமிழ்நாடு அரசின் இந்த சட்டம் தவறாக பயன்படுத்த வாய்ப்புள்ளது என்று வாதிட்டார்.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், விசாரணை ஜூலை 19ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

You may also like

Leave a Comment

2 + 14 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi