சென்னை: இளநிலை மருத்துவ படிப்பில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்பப்பதிவு தொடங்கியது. நீட் தேர்வு முடிவு வெளியாகி தமிழகத்தில் 78 ஆயிரம் பேர் மருத்துவ படிப்பில் சேர தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்நிலையில், 2023-24 ஆண்டிற்கான எம்.பி.பி.எஸ்., மற்றும் பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவ படிப்புகளுக்கு இன்று முதல் ஜூலை 10ம் தேதி மாலை 5 மணி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என மருத்துவ கல்வி இயக்குனரகம் அறிவித்திருந்தது. தமிழ்நாடு அரசு மருத்துவ கல்லூரிகள், பல் மருத்துவ கல்லுரிகளில் சேர மாணவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். அதன்படி, http://tnhealth.tn.gov.in என்ற முகவரியில் இன்று காலை 10 மணி முதல் ஆன்லைன் விண்ணப்பப்பதிவு தொடங்கியது.
மருத்துவ படிப்புக்கான விண்ணப்பதிவு முடிந்த பிறகு, விண்ணப்பப்பதிவு முடிந்து தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டு ஜூலை 2-வது வாரத்துக்கு பிறகு கலந்தாய்வு தொடங்கவுள்ளது. நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ இடங்களுக்கான ஒதுக்கீடு நடைபெறும் என்று கூறப்படுகிறது. மொத்தம் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்கள் கலந்தாய்வு நிரப்பப்பட உள்ளன. இந்த நிலையில், இளநிலை மருத்துவ படிப்பில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு தொடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.