திருவனந்தபுரம்: கொச்சி விமான நிலையத்தில் மஸ்கட்டிலிருந்து கடத்திய ஒன்றரை கிலோ தங்கத்தை சுங்கத் துறை அதிகாரிகள் கைப்பற்றினர். இது தொடர்பாக கோழிக்கோட்டை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டார். மஸ்கட்டிலிருந்து சார்ஜா வழியாக கொச்சிக்கு நேற்று ஒரு தனியார் விமானம் வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் வழக்கமான பரிசோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது கோழிக்கோட்டை சேர்ந்த மன்சூர் என்பவரின் நடவடிக்கைகளில் சந்தேகமடைந்த அதிகாரிகள் அவரது பேக்கை பரிசோதித்தனர். அந்த பேக்கில் ரீசார்ஜ் செய்து பயன்படுத்தும் ஒரு எமர்ஜென்சி லைட் இருந்தது. அதைத் திறந்து பார்த்தபோது பேட்டரிகளைப் பொருத்தும் இடத்தில் பேட்டரியைப் போன்ற வடிவத்தில் தங்கம் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. மொத்தம் 1515.20 கிராம் தங்கம் கைப்பற்றப்பட்டது. இதன் மதிப்பு ரூ.84 லட்சமாகும். தங்கத்தை கைப்பற்றிய அதிகாரிகள் மன்சூரை கைது செய்தனர்.