Saturday, June 1, 2024
Home » ஒரே நாடு, ஒரே தேர்தல் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் கருத்துக்களை கேட்க முடிவு: முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் நடந்த கூட்டத்தில் தீர்மானம்

ஒரே நாடு, ஒரே தேர்தல் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் கருத்துக்களை கேட்க முடிவு: முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் நடந்த கூட்டத்தில் தீர்மானம்

by Ranjith

புதுடெல்லி: ஒரே நாடு, ஒரே தேர்தல் நடத்துவது குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் கருத்தை கேட்க முன்னாள் ஜனாதிபதி ராம்நாத்கோவிந்த் தலைமையில் நடந்த உயர்மட்டக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். நாடு முழுவதும் மக்களவை, மாநில சட்டசபை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதுபற்றி ஆராய முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் 8 பேர் கொண்ட உயர்மட்டக்குழு நேற்று முதன்முறையாக கூடி ஆலோசனை நடத்தியது. உள்துறை அமைச்சர் அமித்ஷா, குலாம் நபி ஆசாத், முன்னாள் நிதி ஆயோக் தலைவர் என்.கே.சிங், மக்களவையின் முன்னாள் பொதுச் செயலாளர் சுபாஷ் சி காஷ்யப், முன்னாள் தலைமை விஜிலென்ஸ் கமிஷனர் சஞ்சய் கோத்தாரி, சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் , சட்ட செயலாளர் நிதன் சந்திரா ஆகியோர் கலந்து கொண்டனர்.

மூத்த வக்கீல் ஹரிஷ் சால்வே காணொளி மூலம் கலந்து கொண்டார். மக்களவை காங்கிரஸ் குழு தலைவர் அதிர்ரஞ்சன் சவுத்திரி பங்கேற்கவில்லை. இந்தக் குழுவினர் அரசியலமைப்புச் சட்டம், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் மற்றும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் நோக்கத்திற்காக திருத்தங்கள் தேவைப்படும் பிற சட்டங்கள் மற்றும் விதிகளில் செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார்கள். இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது:

* அங்கீகரிக்கப்பட்ட தேசியக் கட்சிகள், மாநிலங்களில் ஆட்சியில் உள்ள அரசியல் கட்சிகள், நாடாளுமன்றத்தில் பிரதிநிதிகளைக் கொண்ட கட்சிகள், அங்கீகரிக்கப்பட்ட மாநிலக் கட்சிகள் ஆகியவற்றை அழைத்து நாட்டில் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பாக ஆலோசனைகள்/கருத்துக்களை பெற வேண்டும்.

* ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பாக சட்ட ஆணையத்தின் ஆலோசனைகள் மற்றும் கருத்துக்களை பெற வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே இதுதொடர்பாக விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று தெரிகிறது.

* நாடு முழுவதும் 1951-52 முதல் 1967 வரை மக்களவை மற்றும் சட்டப் பேரவைகளுக்கான தேர்தல்கள் பெரும்பாலும் ஒரே நேரத்தில் நடந்துள்ளது. அதன்பிறகு சுழற்சி முறை மாறிவிட்டது.

* தற்போது மக்களவை (543 எம்.பி.க்கள்), மாநில சட்டப்பேரவை (4,120 எம்.எல்.ஏக்கள்) மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் (30 லட்சம் உறுப்பினர்கள்) ஆகிய மூன்று அடுக்கு ஜனநாயகத்துக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதுதான் ஒரே நாடு, ஒரே தேர்தல் குழுவின் திட்டம்.

You may also like

Leave a Comment

two × 2 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi