சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மின்சார கம்பங்களில் உள்ள மின்விளக்குகள் முறையாக பராமரிக்காத காரணத்தால் அவை எரிவதில்லை. சேலையூர் மற்றும் கிழக்கு தாம்பரம் பகுதிகளில் துவக்கப்பட்ட பாதாள சாக்கடை திட்டப் பணிகளும் சரிவர முடிக்கப்படவில்லை. இதனால், சிறிய அளவு மழை பெய்தாலே மக்கள் சாலைகளில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சேலையூர் மற்றும் இரும்புலியூர் ஏரிகளில் கழிவுநீர் கலப்பதால் ஏரிகள் மாசடைந்து வருகின்றன. அதன்படி, தாம்பரம் மாநகராட்சி மண்டலம் 5ல் நிலவிய அடிப்படை பிரச்னைகள் தொடர்பாக கண்டனம் தெரிவிக்கும் வகையில் அதிமுக சார்பில் வரும் 5ம் தேதி காலை 10 மணிக்கு தாம்பரம் கிழக்கு, மாடம்பாக்கம் ஆகிய பகுதி கழகங்கள் ஒன்றிணைந்து ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. மூத்த நிர்வாகிகள், பொதுமக்கள், தொழிலாளர்கள் மற்றும் வியாபாரிகள் கலந்து கொண்டு ஒத்துழைப்பு தந்திட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.