கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் ரேஷன் ஊழல் வழக்கில் தொடர்புடைய ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் நிர்வாகி ஷாஜகான் ஷேக் வீட்டில் சோதனையிடச் சென்ற அமலாக்கத்துறை அதிகாரிகள் அங்கு கூடியிருந்த கட்சியினர், பொதுமக்களால் தாக்கப்பட்டனர். அதிகாரிகள் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து அமலாக்கத்துறை இயக்குநர் (பொறுப்பு) ராகுல் நவீன் நேற்று கொல்கத்தாவிற்கு சென்றார். காயமடைந்த அதிகாரிகளை சந்தித்து பேசிய அவர் சால்ட்லேக்கில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதைத் தொடர்ந்து ஆளுநர் ஆனந்த் போசையும் அவர் சந்தித்து பேசியிருப்பதாக கூறப்படுகிறது. ரேஷன் ஊழல் தொடர்பான சோதனையை தொடர்ந்து, திரிணாமுல் நிர்வாகி சங்கர் ஆதியா என்பவர் கைது செய்யப்பட்ட நிலையில், தலைமறைவான ஷாஜகான் ஷேக்குக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேற்குவங்க அரசிடம் விளக்கம் கேட்கிறது உள்துறை: அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து மேற்குவங்க அரசு விளக்கம் அளிக்க ஒன்றிய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.