ஒடுகத்தூர் : ஒடுகத்தூர்- வேலூர் வழித்தடத்தில் தனியார் பேருந்து ஓட்டுனர் செல்போன் பேசியபடியே பேருந்து இயக்கியதால் பயணிகள் அச்சத்தில் உறைந்தனர். இதுகுறித்து, நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.வேலூரில் இருந்து அணைக்கட்டு வழியாக ஒடுகத்தூர், ஆலங்காயம், வாணியம்பாடி பகுதிக்கும் ஒடுக்கத்தூரிலிருந்து குருவராஜபாளையம் வழியாக வேலூருக்கும் பல தனியார் பேருந்துகள் அணைக்கட்டு வழித்தடத்தில் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை ஒடுக்கத்தூரில் இருந்து வேலூர் நோக்கி தனியார் பஸ் ஒன்று பயணிகளை ஏற்றி கொண்டு சென்று கொண்டிருந்தது. அப்போது, அந்த பஸ்சின் ஓட்டுனர் நீண்ட தூரம் செல்போன் பேசியபடியே பேருந்தை இயக்கினார்.
சாகசம் செய்வதை போல் ஒரே கையால் ஸ்டேரிங்கையும், அதே கையால் ஹாரனையும் அடித்தும், சில சமயம் ஸ்டேரிங்கை விட்டுவிட்டு பேருந்தை ஓட்டியுள்ளார். இது அப்பேருந்தில் பயணிந்த பயணிகள் இடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியதோடு அவர்களை அச்சத்தில் உறைந்தனர். இதுகுறித்து பயணிகள் ஓட்டுநரிடம் கேட்டபோது முறையாக பதில் அளிக்கவில்லை என கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோ முக நூல், வாட்ஸ் ஆப் போன்ற சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.
இது போன்ற சம்பவங்கள் அவ்வழித்தடத்தில் செல்லக்கூடிய தனியார் பேருந்துகளில் அடிக்கடி நிகழ்வதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். எனவே, தனியார் பேருந்து நிறுவனங்களும், அரசு போக்குவரத்து துறையும் இதனை கண்காணித்து பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் எனவும், விதிமுறைகளை மீறும் ஓட்டுனர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.