நியூயார்க்: ஒடிசா ரயில் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காக ரூ. 8.3 லட்சம் நிதி திரட்டிய அமெரிக்க வாழ் இந்திய மாணவியை பலரும் பாராட்டி வருகின்றனர். ஒடிசாவில் கடந்த சில மாதங்களுக்கு முன் நடந்த பயங்கர ரயில் விபத்தில் 288 பேர் பலியான நிலையில், நூற்றுக்கணக்கானோர் படுகாயமடைந்தனர். ஒன்றிய, மாநில அரசுகள், தன்னார்வ அமைப்புகள் பாதிக்கப்பட்டவர்களுக்கு பல்வேறு உதவிகளை வழங்கி உள்ளன.
இந்நிலையில் அமெரிக்கவாழ் இந்தியரான தனிஷ்கா தரிவால் (16) என்ற மாணவி, ரூ.8,28,516 (10,000 டாலர்) நிதியை திரட்டி உள்ளார். அந்த தொகையை இந்திய பிரதமர் நிதியில் செலுத்துமாறு, நியூயார்க்கில் உள்ள இந்தியத் தூதரகத் தூதர் ரந்தீர் ஜெய்ஸ்வாலிடம் வழங்கினார். இதுகுறித்து தனிஷ்கா தரிவால் கூறுகையில், ‘ஒடிசா ரயில் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக ‘கோபண்ட்மீ’ என்ற ஆன்லைன் பக்கத்தை தொடங்கினேன்.
எனது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் மூலம் 10,000 அமெரிக்க டாலர்களுக்கு மேல் நிதியை திரட்டினேன். இந்த பணத்தை தற்போது இந்திய தூதரிடம் ஒப்படைத்துள்ளேன்’ என்றார். ராஜஸ்தானை சேர்ந்த தனிஷ்கா தரிவாலின் இந்த முயற்சியை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.